மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி
மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர் !
(மக்கள்)
திக்கெட்டும் உள்ளவர் யாரும் – ஒன்று
சேராது செய்வதே மதமாகும் ஆனால்
பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் – அப்
பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்
அக்கட்சி எம்மதத்தாரும் – இங்(கு)
(எ)கெல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்
(மக்கள்)
எல்லா மதங்களும் ஒன்றே – அவை
எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே
சொல்லால் முழங்குவது கண்டீர் – அவை
துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ
எல்லோரும் மக்களே யாவர் – இங்(கு)
(எ) கெல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்
எல்லாரும் ஒரு தாயின் செல்வர் – இதை
எண்ணாத மக்களை மாக்களென் போமே
(மக்கள்)
வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே – நல்
வழிகாட்டி யானபின் வழிகாட்டிடாமல்
பழிகூட்ட வைத்திருப்பீரோ? – நீர்
பகைகூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?
பிழியாக் கரும்பினிற் சாற்றை – நீர்
பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே
அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? – நல்
அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை
(மக்கள்)