மருத்துவப்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல் படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் திமுக, சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராம மூர்த்தி அடங்கி அமர்வு இந்திய இட ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட்டது.
மேலும் மத்திய மாநில அரசுகள் மற்றும் இந்திய கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துமாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நடப்பாண்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மனுக்கள் கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்த போது மருத்துவப்படிப்பில் தமிழகத்தில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட முடியுமா? என்றும் மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதைப்போல் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க முடியுமா என மத்திய அரசும் இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்த போது இந்திய மருத்துவக்கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா , அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நடப்பு கல்விஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனையடுத்து தமிழக அரசு, அ.தி.மு.க. மற்றும் கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் கடந்த 22-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.