around-world

img

உச்சநீதிமன்றம் அடிப்படைக் கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டது - நீதித்துறைப் பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரக்குழு அறிக்கை

சமூக முடக்கக் காலத்தில் உச்சநீதிமன்றம், தன்னுடைய ஆணிவேர் போன்ற அடிப்படைக் கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டது என்று நீதித்துறைப் பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரக்குழு கூறியுள்ளது.

இது தொடர்பாக புதன் அன்று அது ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று சமூக முடக்கக் காலத்தின்போது, நீதி வழங்கும் முறையில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற அடிப்படைக் கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டது என்றும் அரசாங்கம் தன் உறுதிவாக்குமூலத்தில் என்ன சொன்னாலும் அதனை எவ்விதத் தாமதமுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்கிறது என்றும் விமர்சித்திருக்கிறது.

அரசு சாரா நிறுவனமான சிஜேஏஆர் எனப்படும் நீதித்துறைப் பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரக் குழு (CJAR-Campaign for Judicial Accountability and Reforms), முன்னாள் நீதிபதிகள் மற்றும் பிரசாந்த் பூஷன் போன்ற மூத்த வழக்குரைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்தான் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் அளித்திடும் உறுதிவாக்குமூலங்கள் மீது தன்னுடைய நீதித்துறை மறுஆய்வு அதிகாரங்கள் மூலமாக அரசாங்கத்தைப் பதில் சொல்ல வைத்திடும் அரசமைப்புச்சட்டக் கடமையை அது ஆற்றிடவில்லை என்று அது விமர்சித்திருக்கிறது. “வீதிக்குத் தள்ளப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, காஷ்மீரில் 4ஜி இணையத்தொடர்புக்குத் தடை விதித்திருக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது ஆட்கொணர் மனு போன்ற முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தின் செயலற்ற தன்மையைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் ஒருசில வழக்குகள் மட்டும் மிகவும் அவசரகதியில் கேட்கப்படும் அதே சமயத்தில், அதே போன்ற இதர வழக்குகள் எவ்விதமான விசாரணையமின்றி நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பது, மக்கள் மத்தியில் நீதித்துறை நடைமுறைகளின் நேர்மைத்தன்மைமீதே நம்பிக்கையிழக்க வைத்துவிடும் என்றும் சிஜேஏஆர் தெரிவித்திருக்கிறது.    

(ந.நி.)