பெய்ரூட், நவ.12- அமெரிக்காவின் பிரதானக் கட்சிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டுமே இஸ்ரேல் அரசின் குற்றங்களுக்குத் துணை போகின்றவையாகவே இருக்கின்றன என்று ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் சயீது ஹசன் நஸ்ரல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக, பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எந்தவித குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி சிறைக்கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். சர்வதேச சமூகம் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
லெபனானில் தியாகிகள் தினத்தை ஹெஸ்புல்லா அமைப்பு அனுசரித்தது. இதற்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய நஸ்ரல்லா, "இஸ்ரேலிய ராணுவத்தின் குற்றங்கள் மற்றும் பாலஸ்தீன மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்காவின் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டுமே ஆதரிக்கின்றன. இரண்டுமே பிறநாடுகள் மீது போர் மற்றும் படையெடுப்புகளை நிகழ்த்தியுள்ளன" என்றார்.
லெபனானைப் பொறுத்தவரை தனது சொந்த பலத்தை நம்ப வேண்டுமொழிய, அமெரிக்காவை நம்புவதில் பலனில்லை என்று கூறிய நஸ்ரல்லா, "அமெரிக்காவின் நோக்கம் எல்லாம் ஒன்றுதான். அதற்காக அவர்கள் பலவிதமான உத்திகளைக் கையாளுவார்கள். அந்த உத்திகளில் லெபனான் மக்கள் சரணடைய வேண்டியதில்லை. நமது நண்பர்களை நம்பியிருக்கலாம். இஸ்ரேலுடனான கடல் எல்லை உடன்பாடு நமது பலத்தில் உருவாகியிருக்கிறது" என்று தெரிவித்தார்.