world

img

மூக்குடைந்து நிற்கிறது அமெரிக்கா: ரஷ்ய எண்ணெய் அமோக வர்த்தகம்

உக்ரைன் மீது போர் நடவடிக்கையை ரஷ்யா எடுத்ததால், அந்நாட்டைத் தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அறிவித்த பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் அனைத்தும் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.

ராய்ட்டர்ஸ் ஊடகக்குழுமத்தின் ஆய்வு ஒன்றில், "மேற்கத்திய நாடுகள் போட்டுள்ள தடைகளை மீறி, பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை அதிகப்படுத்தியுள்ளன" என்று தெரிய வந்துள்ளது. தடைகள் மூலமாக ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. அந்நாட்டின் எண்ணெய் வர்த்தகம் சரிவடைவதற்குப் பதிலாக பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளன.

அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்த நிகழ்வு என்னவென்றால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வந்த அளவை இரட்டிப்பாக்கியது. தனது மின்னுற்பத்தி மையங்களின் தேவையை நிறைவேற்றவே இதைச் செய்திருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் 6 லட்சத்து 47 ஆயிரம் டன் எடையுள்ள(ஒரு நாளைக்கு 48 ஆயிரம் பீப்பாய்கள் அளவுக்கு) எண்ணெய்யை சவூதி அரேபியா இறக்குமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் வாங்கியதை விட 3 லட்சத்து 20 ஆயிரம் டன்கள் அதிகமாகும்.

இதன்மூலம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியாவை முந்திக்கொண்டு முதலிடத்தை ரஷ்யா பிடித்துள்ளது. பிரேசிலும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தயாராகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத்தேவையில் 40 விழுக்காட்டை ரஷ்யாதான் நிறைவேற்றி வந்தது. தற்போது அமெரிக்காவின் தூண்டுதலால் எரிவாயுவை வாங்காமல் இருப்பதால், பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. குளிர்காலத்திற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்து வருகின்றன.

தோல்வியடைந்ததைத் தாங்க முடியாமல், ஐரோப்பிய ஆணையத்தை அமெரிக்கா தூண்டி விட்டிருக்கிறது. தடைகளைத் தாண்ட முயல்பவர்களுக்கான அனைத்து வழிகளையும் அடையுங்கள் என்று ஐரோப்பிய ஆணையம் மூலமாக அமெரிக்கா ஆணையிட்டுள்ளது. தடைகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்க ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறித்த ஒருமித்த கருத்து உறுப்பு நாடுகளுக்குள் வந்தவுடன், அது வெளியிடப்படும். புதிய தடைகளை ஏற்படுத்தவில்லை. ஜி-7 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தவே இந்த ஏற்பாடுகள் என்றும் கூறியுள்ளனர்.