world

img

பிரான்ஸ் தொழிலாளி வர்க்கம் மீண்டும் கிளர்ச்சி: ஆறாவது முறையாக வேலை நிறுத்தம்

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய நாசகர ஓய்வூதியக் கொள்கைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் தொழிலாளிகள் மீண்டும் ஒருமுறை கிளர்ந்து எழுந்துள்ளனர்.

ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாகச் சொல்லி, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தையே மறுக்கும் வகையில் புதிய திட்டத்தை வலதுசாரிகளின் ஆதரவுடன் மக்ரோன் கொண்டு வருகிறார். செனட் அவையில் இதற்கான ஒப்புதல் பெற்றுள்ளனர். மக்களவையில் போதிய பெரும்பான்மை இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தை மீறி இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்ரோன் முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 62ல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பங்களிப்பு செலுத்த வேண்டிய ஆண்டுகளின் எண்ணிக்கையும் உயர்கிறது.

இந்த நிலையில்தான், பிரான்ஸ் நாட்டின் தொழிலாளிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் 2023 ஆம் ஆண்டில் ஆறாவது முறையாக வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கிறார்கள். அனைத்துத் துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் பணியிடங்களில் இருந்து வெளியேறி தலைநகர் பாரிஸ் மற்றும் மேலும் பல நகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து எரிபொருள் வெளியேறாததால் தொடர் வண்டிகள் நிறுத்தப்பட்டன.

சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து எரிபொருள் வெளியேறாமல் தொழிலாளர்கள் தடுத்து நிற்கிறார்கள். பிரான்சில் எட்டு பெரிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த எட்டு ஆலைகளின் வெளியேறும் கதவுகளின் முன்னால் பெருந்திரளாக தொழிலாளர்கள் நிற்கிறார்கள். அதிகாலையிலேயே குழுமி விட்டதால், வெகு விரைவில் எரிபொருளை வெளியில் கொண்டு செல்வதற்கான முயற்சியும் பலிக்கவில்லை. போராட்டத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல அனைத்து பெரிய தொழிற்சங்கங்களும் முனைந்து நிற்கின்றன.

அடக்குமுறை

போராட்டக்காரர்களின் பேரணிகளைக் குலைக்கும் வகையில் காவல்துறை இறக்கி விடப்பட்டிருக்கிறது. தலைநகர் பாரிசில் அமைதியாகப் பேரணி நடந்து கொண்டிருந்த வேளையில், அதில் பங்கேற்றவர்களைக் காவல்துறை தாக்க முயன்றது. இதனால் இருதரப்பிலும் எதிரெதிர் நடவடிக்கைகள் இருந்தன. காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி மக்களைக் கலைக்க முயன்றது. ஆனால் இவற்றை மீறி மக்களின் ஆதரவோடு வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆரப்பாட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

35 லட்சம் பேர்

தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் 35 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக பிரான்சின் பெரிய தொழிற்சங்கமான சிஜிடி தெரிவித்துள்ளது. அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிபரம் 12 லட்சம் பேர் என்று தெரிவிக்கிறது. போராட்டத்தின் வீச்சை குறைத்துக் காட்டவே எண்ணிக்கையைக் குறைத்துக் கணக்கு சொல்கிறார்கள் என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஆறாவது முறையாக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த ஐந்து முறையை விடத் தற்போது கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள சிஜிடி சங்கத்தின் தலைவர் லாரென்ட் பெர்ஜெர், "ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக இருக்கும் நாட்டின் அனைத்து ஊழியர்கள், குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களை போராட்டக் களத்திற்கு வந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அழைக்கிறேன். மிகப்பெரிய சமூக இயக்கம் இன்று உருவாகியுள்ளது. இதற்கு அரசியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார். கருத்துக் கணிப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர் புதிய ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.