world

img

காசாவுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் கொள்ளை போகின்றன: ஐ.நா தகவல்

காசாவுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் இடையிலேயே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையால், காசாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது.

காசாவில் உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். அங்குள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் பசியால் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

காசா மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்க அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு  ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காசாவுக்கு செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், காசாவுக்கு செல்லும் உணவு உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா புள்ளிவிவரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா புள்ளிவிவரங்களின்படி, கடந்த பல மாதங்களாக மனிதாபிமான உதவிகளுடன் காசாவிற்குள் நுழைந்த ஒவ்வொரு 10 லாரிகளில் கிட்டதட்ட 9 லாரிகள் காசா மக்களால் அல்லது இஸ்ரேல் ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மே மாதம் மொத்தம் 2602 லாரிகள் ஐ.நா.வால் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவற்றில் 2309 அதாவது 88% லாரிகள் திட்டமிட்ட இடத்தை அடையவில்லை. அதற்கு முன்னதாகவே கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோல, ஜூன் மாதத்தில் 1,155 லாரிகள் காசாவிற்குள் நுழைந்த நிலையில், 1108 (90%) லாரிகள் இலக்குகளைச் சென்றடையவில்லை. ஜூலை மாதத்தில் 1,161 லாரிகளில் உணவு உள்ளிட்டப் பொருள்கள் சேகரிப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், 1093 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.