டோக்கியோ, ஜூன் 27- ஜப்பான் தலைநகரான டோக்கியோ பெரு நகரத்திற்குட்பட்ட சுகினாமியின் மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோவின் சுகினாமி நகரத்தின் மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியால் தங்கள் இஷ்டத்திற்கு மக்கள் விரோதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் தாராள ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டாளியான கொமேய் கட்சி ஆகியவற்றிற்கு அதிர்ச்சி வைத்தியம் தர விரும்பிய எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இயங்க முடிவு செய்தன. இதற்கான முன்னெடுப்பை ஜப்பான் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்டது.
இந்த ஒற்றுமையை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பை சுகினாமி மேயர் தேர்தல் வழங்கியது. பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவளிப்பதென்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல்சட்ட ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயக கட்சி மற்றும் ரெய்வா சின்சென்குமி ஆகிய கட்சிகள் முடிவெடுத்தன. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிஷிமோடோ சடோகோவை வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காக அனைவரும் இணைந்து பாடுபட முடிவெடுத்தனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது என்று பிரச்சாரத்தின்போது பார்க்க முடிந்தது. மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் மையங்களை மூடும் ஆளுங்கட்சியின் முடிவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்தப் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் கிஷிமோடோ சடோகோவை மக்கள் வெற்றி பெறச் செய்து மேயராகத் தேர்வு செய்திருக்கிறார்கள். சடோகோவிற்கு 76 ஆயிரத்து 743 வாக்குகள் கிடைத்தன. அதே நகரில் மற்றொரு வார்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி 25 ஆயிரத்து 181 வாக்குகளைப் பெற்றது. சட்டமன்றத்தில் வெற்றி டசிகாவா நகர சட்டமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக எட்டு இடங்களைப் பெற்றிருந்த ஆளும்கட்சி, இரண்டு இடங்களை இழந்து ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.