world

img

ஜப்பான் : 12ஆவது ஆண்டாக மக்கள்தொகை சரிவு

டோக்கியோ, ஏப்.17- 2011 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக ஜப்பானின் மக்கள் தொகை குறை ந்து கொண்டே வந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் ஜப்பான் மக்கள்தொகை 12 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் என்று  அந்நாட்டின் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் மக்கள் தொகையில் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். 12ஆவது ஆண்டாக இந்தக் குறையும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் 12 கோடியே 78 லட்சமாக இருந்த ஜப்பானின் மக்கள்தொகையில் 29 லட்சம் பேர் குறைந்திருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரங்களை அந்நாட்டின் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

1950 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அவற்றை முறையாக வெளியிடுவது ஆகிய பணிகள் நடக்கின்றன. அப்போதிலிருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் தொகை குறைவது இதுவே முதன்முறையாகும். ஆனால், வரும் ஆண்டுகளில் இதைவிடக் குறையலாம் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மக்கள் தொகை குறைந்து வருவது பற்றி கவலை தெரிவித்த ஜப்பான் பிரதமர், “உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சனை. இப்போது இல்லை என்றால், எப்போதுமே செய்ய முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.  தலைமைச் செயலாளர் ஹிரோகாசு மட்சுமோ  கருத்துக் கூறுகையில், “கடந்த பல ஆண்டு களாகவே இந்தப் பிரச்சனையை அரசு உற்றுக் கவனித்து வருகிறது. சரிந்து வரும் பிறப்பு விகிதப் பிரச்சனைக்கு பெரும் முக்கியத்துவம் தருவது என்று அரசு முடிவெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கடந்த 12  ஆண்டுகளில் இந்தப் பிரச்சனையில் ஒரு திட்ட வட்டமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசு தோல்வியைத் தழுவியுள்ளது என்று எதிர்க்கட்சி கள் சுட்டிக்காட்டுகின்றன. 

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிப ரங்களின்படி, 15 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சமாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இது 11.6 விழுக் காடாகும். ஜப்பான் வரலாற்றில் 15 வயதுக்கு உட்பட்டவர்களின் விகிதம் இவ்வளவு குறைவாக இருந்ததில்லை. கூடுதல் கவலையளிக்கும் அம்சமாக பார்க்கப்படுவது என்னவென்றால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை  மொத்த மக்கள் தொகையில் 29 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வேலை செய்யக்கூடிய வர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது உற்பத்தித்துறையைப் பாதித்திருக்கிறது.

பள்ளிகள் மூடல்

ஜப்பான் மக்கள்தொகையில் ஏற்படும்  சரிவு, கிராமப்புறங்களில் உள்ள  பள்ளிக்கூடங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட சரிவு, பல பள்ளிக் கூடங்களில் சேர்க்கைகள் பெருமளவு குறைந்தது. ஒட்டுமொத்தப் பள்ளிக்கூடத்திலேயே ஓரிரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பள்ளிக்கூடங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கப்பட்டன. சில பள்ளிக்கூடங்கள் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லாமலேயே இழுத்து மூடப்பட்டன. பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலை, ஜப்பானின் கல்வித்தரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கருது கிறார்கள். அதோடு, ஏராளமான ஆசிரியர்களின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங் களின் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியர் களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அரசாங்கமே கூறி வருகிறது. புதிய ஆசிரியர்கள் நியமனம் என்பதே இல்லாமல் போய்விட்டது. இருக்கும் ஆசிரியர்களுக்கும் வேலை பறிபோய் வருகிறது. கல்வித்துறையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.