டோக்கியோ, மே 16- ஜப்பானின் ஒகினாவா தீவுகள் அந்நாட்டிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியும், தீவுக்கூட்டங்களில் அமெரிக்கப் படைத்தளங்கள்தான் காட்சியளிக்கின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக, ஒகினாவா தீவுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. 1972 மே 15 ஆம் தேதியன்று அந்தத் தீவுகள் அதிகாரப்பூர்வமாக ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒப்படைக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வுகள் நடப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் ஆண்டுகள் நகர, நகர ஆக்கிரமிப்புக்கு எதிரான தினமாகவே மே 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தீவுகள் ஒப்படைக்கப்பட்டாலும், அமெரிக்கப் படைத்தளங்கள் மாற்றப்படவில்லை. புதிய தளங்கள் மற்றும் பழைய தளங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட வேலைகள் நடந்தவண்ணம் உள்ளன. ஜப்பானில் உள்ள 55 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் ஒகினாவா தீவுகளில்தான் இருக்கிறார்கள்.