world

img

அமைதியா? ஆயுதங்களா?? அமைதிக்காக சீனாவை நெருங்கும் பசிபிக் தீவுகள்

மோதல் போக்குகளை உருவாக்கி நெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அமைதியை நாடும் விருப்பத்தில் பசிபிக் தீவு நாடுகள் சீனாவை நெருங்குகின்றன.

தீவு நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு அந்தத் தீவுகளைத் தனது ராணுவப் படைத்தளங்களாக மாற்றிக் கொள்வதற்காகவே இருந்து வருகிறது. தங்கள் தீவுகளில் உள்ள மக்கள் அமைதியாக வாழ, கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளே உதவும் என்று நாடுகள் முடிவு செய்துள்ளன. அமெரிக்காவுடனான உடன்பாடுகள் அனைத்தும் ராணுவ நடவடிக்கைகளோடு இணைந்தே போடப்படுகின்றன. இதனால், வளர்ச்சிப் பணிகளுக்காக சீனாவுடன் இணைந்து செயல்பட பல பசிபிக் தீவுகள் முடிவெடுத்துள்ளன.

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பல நாடுகளின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சாலமன் தீவுகளுடன் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வளர்ச்சி சார்ந்த ஒப்பந்தம் என்றாலும், அதற்கும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்து எதிர்ப்பு வந்துள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, பேரிடர் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் உடன்பாடுகள் கையெழுத்தாகின்றன,

பிஜி நாட்டுக்குச் சென்ற வாங் யி, அந்நாட்டின் பிரதமரான வோரிக் பைனிமராமாவைச் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியிருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, "பசிபிக் நாடுகளின் பிரதான வர்த்தகக் கூட்டாளியாக சீனா உருவெடுத்துள்ளது. பத்து ஆண்டுகளில் 13 விழுக்காடு அளவுக்கு வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. சாலைகள், பாலங்கள், கிடங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மைதானங்கள் என்று ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசிகள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டன" என்று தெரிவித்தார்.

பசிபிக் தீவுகளுக்கு சீன நிறுவனங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் அமெரிக்க டாலர் மதிப்பில் 20 பில்லியனைத் தாண்டியிருக்கிறது. கடல்சார் சுற்றுச்சூழல் மாசு குறித்து சீனாவுடன் போடப்படும் உடன்பாடு பசிபிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருதுகின்றனர். வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் குறித்த உடன்பாடுகள் அப்பகுதி மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது