world

img

புரட்சியாளர் சேகுவேரா மகன் காமிலோ குவேரா மறைவு

புரட்சியாளர் சேகுவேராவின் மகனும், அவரது பெயரில் அமைக்கப்பட்டிருந்த மையத்தின் இயக்குநர்களில் ஒருவருமான காமிலோ குவேரா தனது வெனிசுலா பயணத்தின்போது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் 60 வயதை நிறைவு செய்திருந்தார்.

சேகுவேராவுக்கும், அலெய்டா மார்ச்சுக்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் காமிலோ மூன்றாவதாகப் பிறந்தவராவார். கியூபத் தலைநகர் ஹவானாவில் அமைக்கப்பட்டிருக்கும் சேகுவேரா மையத்தின் இயக்குநர்களில் ஒருவராக, தனது தாய் அலெய்டாவுடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த மையத்தில் சேகுவேரா தொடர்பான ஏராளமான ஆவணங்கள், நூல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

பொது இடங்களில் பெரும்பாலும் தலைகாட்ட விரும்பாத காமிலோ, தனது தந்தையைக் கவுரவிக்கும் சில நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வந்தார். வணிகத்திற்கான விளம்பரங்களில் தனது தந்தையின் படத்தைப் பயன்படுத்துவதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதை வெளிப்படையாகவே அவர் கூறினார்.

சுய்லென் மிலானெஸ் என்ற பிரபல பாடகியை காமிலோ திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் காமிலா என்ற மகள் இருக்கிறார். துணைவியார் சுய்லென் தற்போது உயிருடன் இல்லை. காமிலோவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ள கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ் கானெல், "மனதில் ஆழமான வலியுடன், சேயின் புதல்வரும், அவருடைய கொள்கைகளை முன்னிறுத்தியவருமான காமிலோ குவேராவை நாங்கள் வழியனுப்புகிறோம்" என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.