கனடாவில் சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலையில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.