கடன் நெருக்கடியில் ஜாம்பியா!
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மீட்புத் திட்டத்திற்காக ஐஎம்எப், (சர்வதேச நிதி நிறுவனம்) 130 கோடி டாலர் புதிய கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது. இக்கடனுடன் கொடூரமான சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகள் திணிக்கப்படுகின்றன. ஜாம்பியாவின் கடன் சுமை 2021 இறுதியில் 1730 கோடி டாலராக உயர்ந்தது. 60 சதவிகித ஜாம்பியாவின் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். ‘பிற்போக்குத்தனமான, விரயமான மானியங்களை’ ஐஎம்எப் சீர்திருத்தம் செய்யுமாம். ‘மோசமான அதீத’ இலக்குகளை கொண்ட பொது முதலீடுகள் குறைக்கப்படுமாம். நியூயார்க்கில் உள்ள அரசியல் பொருளாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சில்வா கூறுகிறார்:- ஐஎம்எப்பின் சிக்கன சீரமைப்பு நிபந்தனைகள், அரசு செலவினங்க ளை கணிசமாக குறைத்திடும். இதன் சுமை ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீதுஏற்றப்படும். எரிபொருள் மானியம் முழுமையாக நீக்கப்படும். இறக்குமதி வரிகள் திரும்பவும் புகுத்தப்படும். மானியம் விலக்கப்படுவதால் மின்சாரக் கட்டணம் உயரும். 2020-ல் 44.5 சதவிகித ஜாம்பிய மக்களுக்குத்தான் மின்சார வசதி உள்ளதாக உலக வங்கி கூறுகிறது. கிராமப்புறங்களில் 14 சதவிகித மக்களே மின்சார வசதி அனுபவிக்கின்றனர்.
விவசாய மானியங்களும் 2025 வாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கும். சில்வா கூற்றுப்படி, பத்து லட்சம் சிறு விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுபவர்கள், மானிய குறைப்பினால் மிகவும் பாதிக்கப்படுவர். வருவாயை அதிகரிக்க மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என ஐஎம்எப் கூறுகிறது. சுரங்க கார்ப்பரேட்டுகளுக்கு பெருமளவில் சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. கொரோனாவிற்கு பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 118 சதவிகிதம் அளவிற்கு கடன் உயர்ந்துள்ளது. இலங்கை அரசு பதினாறு முறை ஐஎம்எப்புடன் கடன் ஒப்பந்தம் செய்தது. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் மீண்டும் ஐஎம்எப்புடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 290 கோடி டாலர் கடனுக்கான பேச்சுவார்த்தை இது. ஜாம்பியாவை போல் இலங்கையும் மானியங் களை கணிசமாக குறைத்திட ஐஎம்எப் நிபந்தனைகளை விதிக்கிறது. லாபம் ஈட்டும் பொதுத்துறை கம்பெனிகளை கூட தனியார் மயமாக்கும் நிபந்தனை விதிக்கப்படுகிறது.
ஈரானின் சாகேஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ஆம் தேதி தனது பெற்றோருடன் தலைநகரான டெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த ‘சிறப்பு கலாச் சாரக் காவலர்களின்’ பணி பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிப்பது. மாசா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம் சாட்டி, சிறப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மூன்று நாட்கள் கோமா நிலையில் இருந்த மாசா அமினி கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி உயிரிழந்தார். மாசா அமினியின் மரணம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏழு வயதிலிருந்து பெண்கள் தலைமுடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்லவோ, வேலைக்கு செல்லவோ முடி யாது எனவும் இந்த பாலின சமத்துவமற்ற ஆட்சியால் தாங்கள் சோர்வடைந்து விட்டதாகவும் ஈரானிய பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசின் இத்தகைய அடக்கு முறையினால் பலர் இறந்துள்ளனர்.
தலிபான் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள் தலை முடியை மறைக்க வேண்டும்; ஹிஜாப் அணிய வேண்டும் என மத அடிப்படை வாத சட்டங்கள் தீவிரமாக அமலாக்கப்படுகின்றன. சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூட பெண்களுக்கான பல கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இந்நிலையில், ஈரானில் சட்டப்படி பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதற்கு எதிராக ஈரானின் பல நகரங்களில் ஆண் களும் பெண்களும் இணைந்து போராடி வருகின்றனர்.
‘பூமியுடன் யுத்தம் வேண்டாம்’
77 ஆவது ஐநா பொது குழு கூட்டத்தில் கொலம்பியாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இடதுசாரி ஜனாதிபதி குஷ்டவோ பெட்ரோ செப்டம்பர் 20 அன்று ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச ஊடகங்களில் பெரிய கவனம் பெறாத அந்த உரையின் சாராம்சம்: பூமியில் மிக அழகான மூன்று நாடுகளில் ஒன்றான கொலம்பியாவை சேர்ந்தவன் நான். அங்கு ஆயிரக்கணக்கான பல்லுயிர்கள் கடலிலும் வானத்திலும் நிலத்திலும் வாழ்கின்றன .மஞ்சள் பட்டாம்பூச்சிகள் ஏராளமாக பறந்த வண்ணம் உள்ளன. பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள், ஏராளமான நீரூற்றுகள். எங்கள் நாட்டின் இயற்கை வளத்தை அழிப்பவர் யார்? அமேசான் காடுகள், ஆண்ட்டிஸ் மலைத் தொடர்கள், கடல்கள் உள்ளன. காடுகளில் உள்ள தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. முக்கிய தாவர வகையான கோகோவை, சுரண்டும் சக்திகள் அழித்து வருகின்றன. அவை காடுகளை அழிக்கின்றன. கோகோ தாவரத்தை அழிக்க கிளைபொசெட் எனும் விஷத்தை தூவுகின்றன. கோகோ வளர்ப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு காலத்தில் கோகோ இலை வைத்திருந்ததற்காக 10 லட்சம் லத்தீன் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்; 20 லட்சம் ஆப்ரோ அமெரிக்கர்கள் வடக்கு அமெரிக்கா வில் சிறை வைக்கப்பட்டனர். சுரண்டும் சக்திகள் காட்டை அழிக்க தீ வைக்கும் போது, கோக்கோ செடிகளும் அழி கின்றன. காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானிகளின் குரல்களுக்கு செவி சாய்ப்பதில்லை. உலகின் வல்லரசுகளுக்கு பணத்தின் மீது, பெட்ரோலிய வளம் மீது, போதைப் பொருட்கள் மீது தீராத ஆசை உள்ளது .கோகோ தவிர விவசாயிகள் வேறு எதுவும் பயிரிட முடியாது .அவர்கள் கொடிய மிருகங்களாக பார்க்கப்படுகிறார்கள். வல்லரசுகள் எங்கள் காடுகளில் விஷம் தூவும். எங்களது ஆண்களை சிறைக்கு அனுப்புவதிலும், பெண்களை தனிமைப் படுத்துவதிலும் நாட்டம் கொண்டுள்ளன. எங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறையில்லை. நிலக்கரி, எண்ணெய் வளங்களை அபகரித்துச் செல்கின்றன. சுற்றுப்புற சூழலை பெருமளவில் மாசுபடுத்துகின்றன.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போர் தோல்வி யுற்றுள்ளது. போதைப்பொருள் நுகர்வை குறைத்திட நாம் யுத்தம் நடத்திட தேவையில்லை .சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் .மனிதர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்தும் சமூகம், அன்பும் பாசமும் நிறைந்த சமூகம் உருவாக வேண்டும் .குறைந்த லாபம், அதிக அன்பு குறித்து சிந்திப்போம் .அமேசான் காடுகளை பாதுகாத்தால் தான் மனித குலத்தைப் பாதுகாக்க முடியும். மனிதகுலம் அழிய 1000 ஆண்டுகளோ சில நூற்றாண்டுகளோ தேவையில்லை.காலநிலை மாற்றங்களால் அது மிக அருகிலே உள்ளது. காலநிலை மோசம் அடைவது குறித்து மனிதகுலம் அக்கறை செலுத்தாமல், உக்ரைனில்,இராக்கில், லிபியாவில், சிரியாவில் யுத்தம் நடத்துவது ஏன்? தெற்கத்திய உலகில் இருந்து பசி கொடுமையினால் பல லட்சக்கணக்கானோர் வடக்கு உலகத்திற்கு புலம்பெயர்ந்து வந்தால் அவர்களை சுட்டுக் கொல்கிறீர்களே?
இது நியாயமா? 1933-ல் ஹிட்லரின் விஷவாயு டாங்கிகளில், சித்திரவதை முகாம்களில், மனிதர்கள் கொல்லப்பட்டதை விட இது கூடுதல் கொடுமை அல்லவா ? உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகளை கூட சரக்குகளாக-லாபமீட்டும் பாதையாக பாவிக்கிறீர்களே? ஏன் ? சந்தைப் பொருளா தாரம் என்பதை உயர்த்திப் பிடிப்பது உங்களின் லாப வெறிக்காகத் தானே? மனித குலத்தை காப்பாற்ற யுத்தம் பயன்படாது .நேட்டோவும், சாம்ராஜ்யங்களும் எவ்வகையில் பயன்படுகின்றன? அறிவை இழப்பது ஏன்? காலநிலை பேரழிவு நாம் வாழும் பூமியில் இயற்கையாக உருவாக வில்லை. மூலதன பேராசையால் உருவாக்கப்படுகிறது. இயற்கையை, நமது வனங்களை பாதுகாக்க செலவிடுங்கள். இதை விடுத்து ராணுவ தளவாடத்திற்கு செலவிடுவதன் பயன் என்ன? ஏழை எளிய நாடுகளின் அந்நிய கடன் சுமைகளை குறையுங்கள். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி ஏற்படுத்துங்கள். சமூக, பொருளாதார, சுற்றுப்புற சூழல் நீதியை நிலைநாட்டுவோம். பூமி கிரகத்துடன் யுத்தம் வேண்டாம் .பூமியுடன் அமைதியாக வாழ்ந்தால்தான் தேசங்களுக்கிடையே அமைதி நிலவும். சமூக நீதியின்றி சமூக அமைதி ஏற்படாது’’.
பற்றியெரியும் ஹைட்டி
சமீப வாரங்களில் ஹைட்டி நாட்டின் தெருக் களில் பேரணிகளும் முற்றுகைகளும் நடைபெறுகின்றன. ஹைட்டி நாட்டின் விவகாரங்களில் அமெரிக்க தலையீடுகளை கண்டித்து, மக்கள் தங்கள் கோபத்தை வங்கிகள் மீதும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கத்தோலிக்க தர்மஸ்தலங்கள் மீதும் காட்டி வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 22 முதல் பல்லாயிரக்கணக்கான ஹைட்டி மக்கள், பொறுப்பு ஜனாதிபதி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வலி யுறுத்தி தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். 2018 மார்ச்சில், சட்டவிரோத அமெரிக்க பொருளா தார தடைகளால், வெனிசுலா அரசு ஹைட்டிக்கு மானிய விலையில் எரிபொருள் அனுப்ப முடிய வில்லை. 2018 ஜூலை மாதம் முதல் ஹைட்டியில் தொடர் போராட்டங்கள் கொரோனாவையும் பொருட் படுத்தாமல் நடைபெற்று வருகிறது. எரிபொருள் விலை 50% உயர்ந்தது. எண்ணெய் அனுப்பும் திட்டத்தில் வெனி சுலா அரசு ஒதுக்கிய பணத்தை ஹைட்டியின் உயர் பணக்காரர் அபகரித்துக் கொண்டனர் .1991லும் 2004-லும் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுகளுக்கு எதிராக நடைபெற்ற சதிகள் மூலம் உயர் பணக்காரர்களின் கை ஓங்கியது.
செப்டம்பர் 26 இல் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தன. வேலை நிறுத்தம் வெற்றி பெற்று தலைநகரம் ஸ்தம்பித்தது. ஐநா தனது ஊழியர்களின் அத்தியாவசியமானவரை தவிர மற்றவர்களை ஹைட்டியில் இருந்து வெளியேற்றியது. முன்னாள் ஜனாதிபதி ஜொவனல் மோய்ஸ் படுகொலைக்குப் பிறகு ஏரியல் ஹென்றி ஜனாதிபதி யானார். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐநா அமைப்புகளின் ஆதரவு இவருக்கு உள்ளது.
2004-இல் ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்றது. 2010-ல் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையை பயன்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஹைட்டிக்கு கொண்டு வந்தன. இவை களே 80 சதவீதம் பொது சேவைகளை வழங்கியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஹைட்டிக்கு வந்த நிவாரணத் தொகையில் குறிப்பிடத் தகுந்த அளவு இந்நிறுவனங்கள் சுருட்டி கொண்டன. 2022 செப்டம்பர் 21-ல் ஐநா பொதுச் சபையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஹைட்டி மக்களுக்கு துணையாக இருப்போம் என பேசினார். ஆனால், ஹைட்டி மக்கள் அமெரிக்காவிற்கு குடியேற விரும்பினால் நிறவெறி கொண்டு அமெரிக்கா தாக்குகிறது. இத்தகைய பின்னணியில், ஹைட்டி மக்களின் போராட்டத்தில் தொழிற்சங்கங்களும் மாணவர் குழுக்களும் ஈடுபட்டிருப்பது ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.