world

img

பாலஸ்தீனர்களை தலையில் சுட்டுக் கொல்ல வேண்டுமாம்

இஸ்ரேல் அமைச்சர் வெறிப்பேச்சு டெல்அவிவ், ஜூலை 1 - இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளின் தலையில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரியும் மதவாத பிற்போக்குவாதியுமான தேசிய பாதுகாப்புத்துறை  அமைச்சர் பென்-க்விர் பகிரங்கமாக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து தினந்தோறும் பல பாலஸ்தீன இளைஞர்களையும்,சிறுவர்களையும்,பெண்களையும் இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக கைது செய்து இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைத்துள்ளது.

மேலும் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு போதிய உணவுகள் கொடுக்காமல் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து வருகின்றனர். இந்நிலையில் “பாலஸ்தீன கைதிகளுக்கு உணவு கொடுப்பதற்கு பதிலாக தலையில் சுட வேண்டும்” என்று  பென்-க்விர் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பகிரங்கமான இனப்படுகொலைக்கான அழைப்பாக உள்ளது என சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் பாலஸ்தீன கைதிகளை தூக்கிலிட வேண்டும் என இஸ்ரேலின் மற்றொரு தீவிர வலதுசாரியான யெஹுடிட் கட்சியால் முன்மொழியப்பட்ட  மசோதாவிற்கு அவர் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து இதுவரை 9,450 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் எந்த ஆதாரமும் இன்றி பல குற்றங்களை சுமத்தி  கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;