பாலஸ்தீன செய்தியாளரான ஷிரீன் அபு அக்லேயின் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று 229 மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
அல் ஜசீரா ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்ரேல் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். பாலஸ்தீனத்தின் அங்கமும், இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான மேற்குக் கரைப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமிற்கு இஸ்ரேலியர்கள் புகுந்து வருவதை செய்தியாக்கும் பணியில் அக்லே இருந்தார். அப்போது அவர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர் என்பதற்கான அடையாளமாக தலையில் கவசமும், பனியனும் அணிந்திருந்தார். அவர் பத்திரிகையாளர் என்று தெரிந்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இது திட்டமிட்ட கொலை என்றும், கொலைக்கு இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று 229 மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. அனைத்து அமைப்புகளும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், "திட்டமிட்ட அரசு பயங்கரவாதத்தின் ஒரு பகுதியே இந்தக் கொலையாகும். குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலைப் போன்று இஸ்ரேலிய ராணுவம் நடந்து கொள்கிறது. உண்மை வெளிவரக்கூடாது என்று கருதி இதுபோன்ற தாக்குதல்களை பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் நடத்துகிறது" என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலும் இந்தக் கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இறுதி ஊர்லவத்திலும் தாக்குதல்
ஷிரீன் அபு அக்லேயின் இறுதி ஊர்வலத்தின் மீதும் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். கொந்தளிப்பான மனநிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அக்லேயின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர். ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது. அதையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். இறுதி ஊர்வலம் என்று கூடப் பார்க்காமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒரு கட்டத்தில் அக்லேயின் உடல் வண்டியில் இருந்து சரியும் நிலையும் ஏற்பட்டது.
இறுதி ஊர்வலத்தைக் குலைக்கும் வகையில் ராணுவம் நடந்து கொண்டதற்கு அல் ஜசீரா ஊடகக்குழுமம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்லேயின் உடலை ஏந்திச் சென்றவர்கள் மீத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். துக்கம் அனுசரித்தவர்கள் மற்றும் அக்லேயின் குடும்பத்தினர் ஆகியோரின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் அரசுதான் பொறுப்பாகும்" என்று கூறியுள்ளது.