world

img

இலங்கை ஆகுமா நேபாளம்?

‘‘நாட்டில் உள்ள அந்நிய செலாவணி இருப்பு பெரும் சரிவைக் கண்டுள்ளது. பொருளாதார நிலைமை முன்னேறாவிட்டால் நடப்பாண்டில் இறுதிவரைதான் அவை இருக்கும்’’.

- நேபாள தேசிய வங்கியின் ஆளுநர் மகாபிரசாத் அதிகாரி.

இவர் இவ்வாறு குறிப்பிட்ட சில நாட்களில் ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அரசின் ரகசியங்களைக் கசிய விட்டுவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தின் கதவை அதிகாரி தட்டினார். ஆளுநர் பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிக்கலாம். அதற்குத் தடையில்லை என்று நேபாள நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  இவரது நீக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தற்போதைய நிதியமைச்சரின் கொள்ளையை அதிகாரி தடுத்ததால்தான் அவர் நீக்கப்பட்டார் என்று நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஓலி குற்றம் சாட்டியுள்ளார்.  உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு ஆகியவற்றால் நேபாளத்தின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலைகள் அதிகரித்ததால், அந்நிய செலாவணி கையிருப்பு மள, மளவென்று சரிந்து கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களைப் பொறுத்தவரை, அனைத்துமே இறக்குமதியைச் சார்ந்ததாகவே உள்ளது. 

அந்நிய செலாவணி ஈட்டுவதில் சுற்றுலா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் அனுப்பும் பணம் ஆகிய இரண்டை மட்டுமே நேபாளம் சார்ந்துள்ளது. இலங்கையிலும் இதுபோன்ற நிலைதான் இருக்கிறது. இலங்கை சர்வதேசக் கடனைத் திருப்பிக் கட்டுவதில் தோல்வியடைந்துள்ளது. நேபாளத்திற்கு அந்த நிலைமை இன்னும் உருவாகவில்லை. ஆனால், நேபாளத்தின் முன்னாள் நிதியமைச்சர்கள் யுவராஜ் காதிவாடா, சுரேந்திர பாண்டே மற்றும் பிஷ்ணு பிரசாத் பாண்டேல் ஆகிய மூவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.  அதில் உடனடியாகப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இலங்கை மாதிரியான நிலைமை நேபாளத்திலும் உருவாகி விடும் என்று அவர்கள் எச்சரித்தனர். பணவீக்கம், அந்நிய செலாவணி இருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி-இறக்குமதிக்கான பணம் பெறுதல் மற்றும் பணம் செலுத்துதல் ஆகிய அம்சங்கள் பெரும் கவலைக்குரியதாக இருக்கின்றன என்பதோடு, நிலைமையைப் பற்றி அரசு கவலைப்படவில்லை என்றும் பாண்டேல் கூறுகிறார்.

இலங்கையோடு ஒப்பிடுவது சரியானதல்ல என்று தற்போதைய நிதியமைச்சர் ஜனார்த்தன் சர்மா தெரிவிக்கிறார். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில், தேசியக்கடன் மிகக்குறைவாகவே இருக்கிறது என்று சர்மா சுட்டிக்காட்டுகிறார். பிப்ரவரி நிறைவு பெறும்போது 9.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நேபாளத்தின் கையில் இருந்திருக்கிறது.  நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கம் இருந்தபோது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், கடனுக்கும் இடையிலான விகிதம் கட்டுக்குள் இருந்தது. சராசரியாக 25 விழுக்காடு இருந்த அந்த விகிதம், தற்போது 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் அனுப்பும் பணமும் 6 விழுக்காடு சரிவைக் கண்டிருக்கிறது.

தவிர்த்திருக்க வேண்டிய பிளவு

நேபாளத்தில் பெரும்பாலும் உட்கட்சிப் பூசல் காரணமாகவே பிரதமர்கள் பதவி இழப்பதுண்டு. அண்மையில் சர்மா ஓலியும் அப்படித்தான் வெளியேறினார். கட்சி மற்றும் ஆட்சியில் அதிகாரப்பகிர்வு முறையாக இருக்கும் என்று தந்த உறுதிமொழியை சர்மா ஓலி நிறைவேற்றாததே நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.  இதிலிருந்து விலகிய ஒரு பிரிவும், பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் மையமும் ஆதரவை விலக்கிக் கொண்டன. இவர்கள் ஆதரவுடன் தற்போது நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தாபா பிரதமர் ஆகியுள்ளார். அரசியல் உறுதியற்ற நிலை பொருளாதார மீட்சியைப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அமெரிக்க உள்ளடி வேலைகள்

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வந்ததில் இருந்தே தனது கட்டுப்பாட்டை நாட்டின் மீது செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா முயற்சித்தே வந்தது. உதவிப் பொருட்களை வழங்கும் திட்டம் என்ற பெயரில் அமெரிக்கா உள்ளே நுழைந்துள்ளது. மக்கள் மத்தியில் இதற்குக் கடும் எதிர்ப்பு இருக்கிறது.  சீன எதிர்ப்புக்கு நேபாளம் உதவும் என்ற எண்ணத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருக்கையில் பெரும் முயற்சி நடந்தது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஆட்சியின்போது நிறைவேறாத இந்த வேலை, தற்போது நேபாள காங்கிரஸ் ஆட்சியால் அனுமதி தரப்பட்டிருக்கிறது. சர்மா ஓலியின் அரசு கவிழ்ந்ததற்கும் இந்தத் திட்டத்தின் மீது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியுதவிகளை நிறுத்தி விடுவோம் என்று அமெரிக்கா மிரட்டியது. நேபாளத்திற்கு மிக அதிக அளவில் நிதியுதவியை செய்து வரும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  அதனால் அரசியல் நிலைப்பாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர், ‘‘நேபாளத்தின் இறையாண்மை மற்றும் நலன்களுக்கு இந்தத் திட்டம் எதிரானது. எந்த நாட்டுக்கு உதவி செய்தாலும் அரசியல் ரீதியான நிபந்தனைகளை சீனா ஒருபோதும் விதிப்பதில்லை’’ என்று குறிப்பிட்டார்.

பொது வாக்கெடுப்பு

நூர் சுல்தான், மே 2- நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி  ஒப்புதல் பெற கஜகஸ்தான் திட்டமிட்டு வரு கிறது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் ஜனாதிபதி காசிம் ஜோமர்ட் டோகயேவ் இந்த ஆலோசனையை முன்வைத்திருக்கிறார். மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடக்கும். நாட்டின் வருங்காலத் திசைவழியைத் தீர்மானிப்பதில் பங்கேற்று செழுமைப்படுத்துங்கள். புதிய கஜகஸ்தானை உருவாக்க இது உதவும் என்று அவர் மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

மிரட்ட வேண்டாம்

பியாங்யாங், மே 2- எங்களுக்கு எதிரான ஆபத்தான முயற்சி களையும், மிரட்டல்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து வடகொரிய ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டபோது உரையாற்றியிருக்கிறார். அப்போது அவர், ‘‘எதிரிகளிடமிருந்து அணு  ஆயுத மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் முந்திக் கொள்வோம். மிரட்டல் வந்தால் அணு ஆயு தத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம். அணு ஆயுதங்கள் எங்கள் நாட்டுப் பாது காப்பின் உயிர்நாடியாகும்’’ என்று குறிப்பிட்டார். 

ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு

டமாஸ்கஸ், மே 2- சிரியாவில் உள்ள கோலன் மலைப்பகுதி யில் காற்றாலைகளை அமைக்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இந்தப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில், தனது  ஆக்கிரமிப்பை பலப்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பு  பகுதிகளில் காற்றாலைகளை அமைக்கப் போகிறார்கள். இதற்காக சிரிய மக்கள் விவ சாயம் செய்து வரும் 1,482 ஏக்கர் நிலங் களை இஸ்ரேல் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கை க்கு எதிராகக் குரல் எழுப்புமாறு போராடி வரும் மக்கள் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.