அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பெரும் பகுதி சுற்றுலா வருவாயை நம்பியிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்நாட்டில் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஊழல், தவறான பொருளாதாரக் கொள்கையால் கிட்டத்தட்ட இலங்கை திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் மின்சார தட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நெருக்கடி குழந்தைகளின் கல்வியையும் விட்டு வைக்காததால் இலங்கையின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதில் ஆவேசமடைந்த பொதுமக்கள், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தபய ராஜபட்சேவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு, இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதனால் கொழும்புவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்த நிலையில், நேற்று இரவே கோத்தபய ராஜபக்சே பத்தரமுல்லையில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அவர்களை கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதில் இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவும் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.