இலங்கையில் மக்களின் அதிகாரம் என்ன என்பது மகத்தான பாணியில் ஜூலை 9 அன்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதியின் செயலகம் மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ குடியிருப்பு ஆகியவற்றை, அங்கு காவலுக்கிருந்த காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரைப் புறந்தள்ளிவிட்டு, கையகப்படுத்தி இருக்கின்றனர்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மற்றும் ராஜபக்சே குடும்பத்தினரின் எதேச்சாதிகார-ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவது என்ற தீர்மானகரமான முடிவோடு, நாடு முழுவதுமிருந்து குறைந்தபட்சம் 20 லட்சம் எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் கொழும்புவிற்கு வந்திருக்கின்றனர். கோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி மாளிகையிலிருந்து ராணுவத் தளம் ஒன்றிற்குச் சென்ற பின்னர் ஜூலை 13 அன்று, தான் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அதே நாளன்று, அதிகாலையிலேயே கோத்தபய ராஜபக்சே ராணுவ விமானம் ஒன்றில் மாலத்தீவுக்குத் தப்பிப் பறந்து சென்றார். இவ்வாறு ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான மக்கள் எழுச்சியின் ஒரு பகுதி முடிவுக்கு வந்திருக்கிறது.
எனினும், கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறும் சமயத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை இடைக்கால ஜனாதிபதியாக (acting President) நியமனம் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இது, இலங்கை அரசின்மீது ஏதாவது ஒரு விதத்தில் தன் கட்டுப்பாட்டை நீட்டித்துக்கொள்வதற்கான கடைசி முயற்சியாகும். ரணில் விக்ரமசிங்கே, அனைத்துக் கட்சி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் ராஜினாமா செய்துவிடுவதாக உறுதி அளித்திருக்கிறார். இது, இலங்கை அரசமைப்புச்சட்டமானது, ஜனாதிபதி இல்லாத சமயத்தில் பிரதமர், இடைக்கால ஜனாதிபதியாக இருப்பதற்கு வகை செய்திருப்பதால், கோத்தபய ராஜினாமா செய்யும் வரையிலும் பிரதமராக நீடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள காலங்கடத்தும் ஓர் உத்தி என்பது தெளிவாகவே தெரிகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சனைகளுக்கு ராஜபக்சே குடும்பத்தினரைப் போலவே விக்ரமசிங்கேயும் பொறுப்பாவார் என்பதால் இவர் இடைக்கால ஜனாதிபதியாக இருப்பதும் மக்களைக் கோபமடைய வைத்திருக்கிறது. மே 9 அன்று கோத்தபய சகோதரர் மகிந்தா ராஜபக்சே அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர், நாடாளுமன்றத்தில் யுஎன்பி கட்சியின் ஒரேயொரு உறுப்பினராக இருந்த விக்ரமசிங்கேயை கோத்தபய பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். விக்ரமசிங்கேயும், ராஜபக்சே குடும்பத்திற்குப் பதிலாகப் பொறுப்பேற்றவுடனேயே அவசர நிலை பிறப்பித்ததும், நாட்டில் “பாசிஸ்ட் சக்திகள்” ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி அமைதியைக் கொண்டுவர சகலவிதமான அதிகாரங்களையும் ராணுவத்திற்கு அளித்ததன் மூலமும் மக்கள் மத்தியில் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டார். ஆயினும், மக்களின் மகத்தான சக்தி மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சொகுசு வாழ்க்கையில் ஊறித்திளைத்துக் கொண்டிருந்த ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளை அவர்கள் முறியடித்தார்கள். போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பிரதமரின் அலுவலகத்திற்குப் பேரணியாகச் சென்று ஜூலை 9 தேதியன்று செய்ததைப்போன்றே மீளவும் வீரச்சமர் புரிந்தார்கள். அவர்கள் தங்கள் மீது ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கண்ணீர்ப் புகை குண்டுகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தடையரண்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து அலுவலகத்தைக் கைப்பற்றினார்கள்.
இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியேயுள்ள, காலிமுகத் திடலில் (Galle Face Green), நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அணிதிரண்டு, நாட்டில் உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பரவலான பணவீக்கத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக, மார்ச் 31 அன்று போராட்டத்தைத் துவக்கினார்கள். நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்ததாலும், நாடு அந்நியக் கடன் வலையில் வெளிவரமுடியாத அளவிற்குச் சிக்கிக்கொண்டதாலும், “வீட்டுக்குப் போ கோத்தா” (“Gota go gama-Go home Gota) என முழக்கமிட்டு அமைதியாகத் துவங்கிய இயக்கத்தில், காலிமுகத்திடலிலும், பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் அதிகாரபூர்வ இல்லத்தின் முன்பும் அமைக்கப்பட்ட முகாம்களிலும் அனைத்துப் பகுதி மக்களும் அணி அணியாக வந்து திரண்டனர்.
மே 9 அன்று பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் குண்டர்கள் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டபோது, போராட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குண்டர்களுக்குப் பதிலடி கொடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைப் பார்த்தோம். வெகுஜனப் போராட்ட இயக்கம் இரு பொது வேலை நிறுத்தங்களை நடத்தியதையும் பார்த்தோம். தொழிலாளர் வர்க்கத்தால் அறைகூவல் விடுக்கப்பட்ட அந்த இரு பொது வேலை நிறுத்தங்களிலும் அனைத்து மத நம்பிக்கையைச் சார்ந்தவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்றார்கள்.
மே 9க்குப் பிறகும் ஆட்சியில் நீடிப்பதற்கான முயற்சிகளை கோத்தபய மேற்கொண்டார். இதற்காக அவர் ரணில் விக்ரமசிங்கேயைப் பிரதமராக நியமனம் செய்ததைப் பார்த்தோம். இது ஒரு வடிகட்டிய சந்தர்ப்பவாதமாகும். யுஎன்பி என்னும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP-Sri Lanka Podujana Peramuna) என்னும் ஆளும் கட்சியால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். இத்தகு சூழ்ச்சி நடவடிக்கைகளும் கூட கோத்தபயவிற்கு சிறிது காலத்திற்குத்தான் உதவியது. மக்கள் மத்தியில் அதிருப்தி உணர்வு அதிகரித்துக்கொண்டிருப்பதால், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், போராடும் மக்கள் இயக்கத்திற்கு எதிராகவும் வலுக்கட்டாயமாக நடவடிக்கைகள் எடுத்திட ராணுவம், காவல்துறை மற்றும் நீதித்துறை முன்வரவில்லை. இவ்வாறு அரசாங்கம் முற்றிலுமாக தனிமைப்பட்டுவிட்டது.
இலங்கையில் கடந்த இருபதாண்டுகளாக ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. முன்பு, மகிந்தா ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோது, சிங்கள புத்திஸ்ட் பெரும்பான்மைவாதத்தை சார்ந்து எதேச்சாதிகார ஆட்சியை நடத்தி வந்தார். ஜனாதிபதி ஆட்சிமுறை அதிகாரத்தைக் குவிக்கும் கருவியாக மாறி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஓர் எதேச்சாதிகார ஆட்சியின் கீழான ஊழல் வலைப்பின்னலை உருவாக்கி இருந்தது.
கோத்தபய ராஜபக்சே 2019இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தம், ஜனாதிபதிக்கு வானளாவிய அளவில் அதிகாரங்களை வழங்கியது. மூத்த நீதிபதிகள் நியமனத்தில் முழுமையான கட்டுப்பாடு, தேர்தல் ஆணையம், போலீஸ் ஆணையம் மற்றும் ஊழலை விசாரித்திடும் ஆணையம் என அனைத்தின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டை அளித்தது. இத்துடன் இவருடைய சகோதரரே பிரதமராக இருந்தார். இதர சகோதரர்களும், குடும்ப உறுப்பினர்களும் முக்கியமான அமைச்சர்களாகவும், நாட்டின் கேந்திரமான பதவிகளிலும் நியமனம் செய்யப்பட்டனர். நாட்டின் மொத்த பட்ஜெட் தொகையில் 75 விழுக்காடு நேரடியாகவே ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வரையறைக்குள் இருந்தது.
இப்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் அங்கே பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்காதது, தவறான கொள்கைகளைப் பின்பற்றியது போன்றவற்றால் மட்டுமல்ல, பொருளாதாரத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியதும் முக்கிய காரணமாகும்.
13ஆம் தேதி மாலை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்திட வேண்டும் என்றும், சபாநாயகர் இடைக்கால ஜனாதிபதியாக மாற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ராணுவத்தினர் இத்தகைய அரசமைப்புச்சட்ட நடவடிக்கையை ஏற்க வேண்டும். மாறாக ராணுவம், ரணில் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுத்தால் ஓர் ஆபத்தான நிலைமை எழுந்திடும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மிகவும் சிக்கலானதாகும். அங்கேயுள்ள பிரதான அரசியல் வர்க்கத்தில் பெரும்பாலானவை மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துள்ள போதிலும், கருத்தொற்றுமையுடனான பிரதமர் ஒருவருடன் ஓர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது கட்டாயமாகும். அடுத்த நடவடிக்கையாக எதேச்சாதிகாரத்திற்கு அடிப்படை ஆதாரமாக இருந்துவரும் ஜனாதிபதி ஆட்சிமுறையை (executive presidency) ஒழித்துக்கட்டுவதற்கு அரசமைப்புச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
முன்னேறும் பாதையில் ஏராளமான தடைகள் இருக்கின்றன. இப்போதைய நாடாளுமன்றம் இப்போதும் ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP-Sri Lanka Podujana Peramuna) கட்சியின் ஆதிக்கத்தின்கீழ்தான் இருக்கிறது. மக்களின் நம்பிக்கையுடன் ஒரு புதிய ஜனாதிபதியைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆறு மாதங்களுக்குப்பின்னர் புதிதாகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இறுதியாக, பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்பவேண்டிய, முட்கள் நிறைந்த கடினமான பணி இருக்கிறது. சர்வதேச நிதியம் ஏதாவது கடன் அளிக்க முன்வருமானால் அது விதித்திடும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கு அது, கடும் சிக்கன நடவடிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு நாட்டைத் தள்ளிவிடும்.
இலங்கை மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டப் பாதையில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும், இதுவரை அவர்கள் பெற்றிருக்கிற சாதனை என்னவென்றால், அது சிங்கள இனத்தின் அடிப்படையிலான தேசிய வெறியையும், புத்த மதத்தின் அடிப்படையிலான மதவெறியையும் மேற்கொண்டு ஆட்சிபுரிந்து வந்த எதேச்சாதிகார ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கையை அளித்திருக்கிறது. தன்னை எவரும் அசைக்கவே முடியாது என்று ஆடிக்கொண்டிருந்தால், மக்கள் எப்போதும் அதனை ஏற்றுக்கொண்டு அடிமைகளாகவே இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். சரியான முறையில் சரியான நேரத்தில் அவர்கள் கணக்கு தீர்ப்பார்கள்.
(ஜூலை 14, 2022)
(தமிழில்: ச.வீரமணி)