world

img

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் தேர்வு  

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் எஸ்.கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் சக்திவேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.  

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெறவுள்ளது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்த ஆண்கள் ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.கார்த்தி (20), மிட்பீல்டர் மாரீஸ்வரன் சக்திவேல் (21) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர் என்று தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டின் தலைவர் சேகர் ஜே. மனோகரன் திங்களன்று தெரிவித்தார்.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள்.

13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் சீனியர் ஹாக்கி அணியில் தமிழர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.