இஸ்லாமாபாத், ஜூலை 25- பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு திங்களன்று கடும் சரிவடைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 230 ஆக சரிந்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொதுத் துறை வங்கியான எஸ்பிபீ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திங்களன்று வர்த்தகத்தின்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 230 ஆக சரிந்தது. இது இதற்கு முன்பு 228.37 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்த வேண்டிய தொகைகளுக்கு பாகிஸ்தானிலிருந்து அதிகளவில் டாலர் வெளியேறுவது, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானின் லாகூர் நகரில், அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் மயக்க மருந்து போதிய அளவுக்கு கையிருப்பில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதிய அளவுக்கு மயக்க மருந்து இல்லாமல் இருப்பது, சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக அந்நாட்டு ஊடகங்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளன.