தி ரிடர்ன் ஆப் தி மார்தா கேர்
(பிரெஞ்ச் சினிமா / 1982 /இயக்கம் டேனியல் வீன்
“ப்ரீயட் பிலிம்” என்ற வகைமையில் பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகத்தின் ஒரு துளி வாழ்க்கையை நேர்த்தியாகப் படைத்துக் காட்டுகிறது இப்படம். ஆண்டு 1542. நிலப்பிரபுத்துவம், அதனை ஆதரித்த கிறித்தவ மத பீடங்கள் என ஐரோப்பிய சமூகம் முழுவதும் இரட்டை நுகத்தடியின் கீழ் உழன்று கொண்டிருந்த காலம். தெற்கு பிரான்ஸின் அர்டிகாட் ஊரைச் சேர்ந்த “மார்தா கேர்” என்ற ஆணுக்கும் “பெர்ட்ரான்ட்” என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அசையா மற்றும் அசையும் சொத்துக்களை பெர்ட்ரான்ட் வர தட்சணையாகக் கொண்டு வருகிறாள். மார்தாவின் பெற்றோர்கள், சகோதரிகள் மற்றும் அவர்களின் கணவன்மார்கள், குழந்தைகள் மற்றும் வேலைக் காரர்கள் என்று பெரிய குடும்பம். நிலத்தில் பாடுபட்டு உழைத்து நன்றாக வாழும் குடும்பம். திருமணமான புதிதில் மார்தாவுக்கு மனைவி யோடு உறவு கொள்வதில் பிரச்சனை. சிறிது காலத்தில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மார்தா சரியாகி விடுகிறான். மார்தா-பெர்ட்ரான்ட் தம்பதி களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. பெர்ட்ரான்ட்க்கு தன் கணவன் மார்தா தன்னிடம் அன்பாக இல்லை என்ற குறை இருக்கிறது. அவனும் அவளை அன்பற்றும், மரியாதைக் குறைவாகவும் நடத்துகிறான். சோம்பேறியாகவும், உழைப்பைத் தவிர்ப்பவனாகவும் இருக்கிறான். இதனால் பெற்றோரிடமும் உறவு சரியாக இல்லை. ஒரு நள்ளிரவில் மனைவி, மகன் மற்றும் தன் குடும்பத்தை விட்டுவிட்டு மார்தா ஓடிப்போகிறான். ஓடிப்போன மார்தாவை நினைந்து வருந்தி அவனது தந்தையும், தாயும் உயிரை விடுகின்றனர். இதன் பின்னர் கணவனை இழந்த பெர்ட்ரான்டின் தாய் சொத்துக்காக, மனைவியை இழந்த மார்தாவின் மாமாவைத் திருமணம் செய்து கொள்கிறாள். ஓடிப்போன மார்தாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. ஒன்ப தாண்டுகள் கழிகிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில் பெர்ட்ரான்ட் தன் கணவனை மனதில் நினைந்து தூய்மையான வாழ்க்கை வாழ்கிறாள். பல ஆண்கள் அவளைத் தொந்தரவு செய்கிறார்கள். எனினும் அவள் இடம் கொடுக்காமல் தூயவளாக வாழ்ந்து வருகிறாள்.
ஒருநாள் திடீரென நான்தான் மார்தா கேர் என்று கூறிக் கொண்டு ஒருவன் ஊருக்குள் வருகிறான். மார்தா குடும்பத்தார் அவனைப் பலவகையிலும் கேள்விகள் கேட்கின்றனர். எல்லாவற்றுக்கும் அவன் சரியாகப் பதில் சொல்லி விடு கிறான். தயக்கத்தோடு குடும்பம் அவனை மார்தா என ஏற்றுக் கொள்கிறது. பெர்ட்ரான்ட்க்கு தகவல் போகிறது. ஆவலோடு ஓடிவந்து தனது கணவனைக் கட்டித் தழுவுகிறாள். ஒவ்வொருவரும் ரகசியமாக பெர்ட்ரான்ட்டிடம் வந்து ‘‘அவன் உன் புருஷன்தானா?’’ எனக் கேட்கிறார்கள். படுக்கையைப் பங்குபோட்டு, தன் உடலையும், மனதையும் அளித்த மனைவிக்கு தன் கணவன் யார்? என்பது எப்படியும் துல்லியமாகத் தெரிந்துவிடுமென்ற ஆவல் அவர்களுக்கு. பெர்ட்ரான்ட்டும் ‘‘இவன் என் கணவன்தான்’’ என்று உறுதிபடக் கூறி விடுகிறாள். அவளே சொல்லிவிட்ட பிறகு உறவினர்களும், ஊர் மக்களும் மார்தாவை ஏற்றுக்கொள்கின்றனர். மார்தா தன் மனைவியிடமும் குழந்தையிடமும் அன்பாக இருக்கிறான். குடும்பத்தாரோடு சேர்ந்து கடுமையாக உழைக்கிறான். பழைய மார்தாவுக்கும் புதிய மார்தாவுக்கும் நிறைய வித்தியாசத்தைப் பார்க்கிறார்கள் குடும்பத்தார்கள். மார்தா-பெர்டினான்ட் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வாழ்க்கை இனிமையாகப் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென ஒரு நாள் மார்தா தன் மாமனிடம் போய், தான் இல்லாத ஒன்பது ஆண்டுகளில் நிலத்திலிருந்த கிடைத்த வருமானத்தில் தனக்குரிய பங்கைத் தருமாறு கேட்டுத் தகராறு செய்கிறான். ‘‘நீ ஊரிலும் இல்லை; உழைக்கவும் இல்லை நான் எப்படி உனக்கு வருமானத்தில் பங்கு தருவது?’’ எனக் கேட்கிறான் மாமன்.
மார்தா கேட்பது சரிதான் என்றும்; சரியில்லை என்றும் குடும்பம் இரண்டுபடுகிறது. இதற்கிடையில் அவ்வூருக்கு வரும் ஒரு நாடோடிக் கும்பல் மார்தா என்ற பெயரில் இருப்பவன் அர்னாட் என்பவன். அவன் ஆள்மாறாட்டம் செய்கிறான் என்று கொளுத்திப் போடுகிறது. மார்தாவின் மாமன் இதைக் கையிலெடுத்துக்கொண்டு மார்தாவை மார்தா இல்லை என்றும் ஆள்மாறாட்டம் செய்கிற பேர்வழி என்றும் குற்றஞ்சாட்டுகிறான். வழக்கைத் தீர விசாரிக்க துலுசா பாராளுமன்ற உறுப்பினரான இயான் து ருஸ், அர்டிகாட் வருகிறார் இறுதியாக பெர்டினான்ட்டிடம் அவன் உன் கணவனா, இல்லையா? என்ற கேள்வி வருகிறது. அவளோ, “இருப்பவன் என் கணவன் மார்தாதான்..” என்று அடித்துச் சொல்கிறாள். மார்தா விடுதலை செய்யப்படுகிறான். எனினும் மார்தா மறுபடி கைது செய்யப்படுகிறான். வழக்கு மேல் விசாரணைக்குச் செல்கிறது. அங்கு நடக்கும் விசாரணையில் புகார்க் கடிதத்தில் தன் கையெழுத்தைப் போலியாகப் போட்டிருக்கிறார்கள் என்றும் இருப்பவன் தன் கணவன் மார்தாதான் என்றும் பெர்ட்ரான்ட் மறுபடியும் அடித்துக்கூற மன்றம் அவளது கூற்றை ஏற்றுத் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் உண்மையான மார்தா வந்து சேர்கிறான். வேறுவழியின்றி மார்தாவின் பெயரில் இருக்கும் அர்னாட் தான் அர்னாட்தான் என்று ஒத்துக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துவிட பெர்ட்ரான்ட்டும் ‘‘ஆமாம் இவன் மார்தா இல்லை அர்னாட்தான்’’ எனக் கூறுகிறாள். ஆள்மாறாட்டக் குற்றத்துக்காக அர்னாட்க்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இப்பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. பெர்ட்ரான்ட், ஏன் திரும்பத் திரும்ப அர்னாட்டை தன் கணவன் மார்தா தான் என அடித்துச் சொன்னாள்? கணவன் உயிரோடு இருக்கையில் வேறொரு ஆடவனோடு தன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பெண்ணுக்கு, அக்காலத்தில் சட்டப்படி தூக்கு உண்டு. அவ்வகையில் பெர்டரான்ட்க்கு தூக்கு உறுதி. ஆனால், இயான் து ருஸ் வேண்டுகோளின்படி அவள் விடுதலை செய்யப்படுகிறாள். ‘‘ஏனம்மா அர்னாட்டை உன் கணவன் என்று தீர்மானமாகச் சொன்னாய்?” என்று இயான் து ருஸ் கேட்கையில் அவள் அளிக்கும் பதில் இதுதான். ‘‘அர்னாட், மார்தாவைப் போல் இல்லை. அர்னாட் என்னை மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினான். ஒரு பெண்ணுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? எனவேதான் அர்னாட்டை நான் என் கணவனாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்’’ என்கிறாள். பின் கடைசி நேரத்தில் ஏன் பின்வாங்கினாய்? “ஏனெனில் அர்னாட்டின் கண்களை நான் பார்த்தேன் அதில் எனக்கு இரண்டு செய்தி கள் கிடைத்தன. ஒன்று, இனியும் நான் தப்பிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக் கில்லை. இரண்டு, நீயாவது உன் குழந்தை களோடு இந்த உலகில் நல்லபடியாக வாழ வேண்டும். அவன் கண்களிலிருந்து எனக்குக் கிடைத்த செய்தி இதுதான்..” என்று உடைந்து அழுகிறாள். இந்தப் பதிலால் உணர்ச்சியுறும், முற்போக்கு சிந்தனை கொண்ட இயான் து ருஸ் அவளை விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க, அவள் விடுதலை செய்யப்படுகிறாள்.
வருடம் 1572. பிரான்ஸில் கத்தோலிக்கர்களுக்கும் புரோடஸ்டன்டுகளுக்கும் இடையே போர் உச்சத்தில் இருக்கிறது. புனித பாலோமுயி என்ற இடத்தில் கத்தோலிக்கர்களால் நூற்றுக்கு மேற்பட்ட புரோடஸ்டன்டுகள் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்டவர்களில் ஒருவர் இயான் து ருஸ். இறுக்கமான கத்தோலிக்க மதத்தை எதிர்த்து பிறந்ததுதான் ப்ரோட்டஸ்டண்டு பிரிவு.