அசானி புயல் ஆந்திர கடற்கரையை நெருங்கி வருவதால் ஆந்திராவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வலுவடைந்து புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான அசானி புயல், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவிலிருந்து 210 கி.மீ., தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 310 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
நாளை காக்கிநாடாவுக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்து ஒடிசா நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆந்திராவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒடிசா, ஆந்திர மாநிலம் காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.