world

img

காலத்தை வென்றவர்கள் : அந்தோணியா கிராம்ஷி பிறந்தநாள்....

இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர்மற்றும் எழுத்தாளர் அந்தோணியா கிராம்ஷி 1891ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம்நாள் பிறந்தார். இவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் மற்றும் தலைவராக இருந்தவர். பாசிச சர்வாதிகாரி முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்ட கிராம்ஷி  20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய சிந்தனையாளர்களில் ஒருவராவார். கலாச்சார மற்றும் அரசியல் தலைமையைப் பகுப்பாய்வு செய்துள்ள அவரது எழுத்துக்களில் பண்பாட்டு மேலாதிக்க கோட்பாடுகளை முன் வைக்கின்றார். முதலாளித்துவ சமூகத்தில் , பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கின்றன என்பதை விளக்குகிறார்.

ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்கள் பொருளாதாரத்தில் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதோடு நின்று விடுவதில்லை.மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த கருத்துக்கள்,சிந்தனைமுறை அனைத்திலும் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இடையறாது முயற்சிக்கின்றனர்.இதனையொட்டி,கிராம்ஷி,தனது பிரசித்திபெற்ற “கருத்து மேலாண்மை”, “குடியுரிமை சமூகம்”, “பொதுபுத்தி” போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார்.அரசு செயல்படும் விதம்,அதன் கட்டமைப்பு,ஆட்சி நடைபெறும் தன்மை,அரசியல் இயக்கங்களின் தன்மைகளும்,செயல்பாடுகளும் என பல வகையில் ஆராய்ச்சியை மேற்கொண்டு மார்க்சிய அரசியல் தத்துவத்தைக் கிராம்ஷி உருவாக்கினார். சோசலிச சமூகம் பற்றியும், அந்த சமூகத்தை வென்றடைவதற்கான வழிமுறை உத்திகளும்ஒருசேர ஆராய்ந்தார் கிராம்ஷி. இவர் 1937 ஏப்ரல் 27ல் மறைந்தார்.

==பெரணமல்லூர் சேகரன்==

;