குயிட்டோ, ஜூன் 12- ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் நடைபெற விருக்கும் தேர்தல்களில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்கான தீவிர தயாரிப் பில் இடதுசாரிகள் முனைப்பாக இருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் கில்லர்மோ லஸ்ஸோ, இடதுசாரி வேட்பாளரை யாரும் எதிர்பாராத விதத்தில் தோற்கடித்தார். முதல் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் அரவுஸ், தனக்கு அடுத்த இடத்தில் வந்த லஸ்ஸோவை விட பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், முதல் சுற்றிலேயே வெற்றி-தோல்வி தீர்மானமாகாத நிலையில், இரண்டாவது சுற்றில் அரவுஸ் மற்றும் லஸ்ஸோ ஆகிய இரு வருக்கும் இடையில் நேரடிப் போட்டி நடந்தது. வலதுசாரிகளுக்கிடையில் ஏற்பட்ட ஒருங்கி ணைப்பு மற்றும் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களில் இடதுசாரிகளுக்கு எதிரான அந்நிய சக்திகளின் பிரச்சாரம் ஆகியவற்றால் வலதுசாரி லஸ்ஸோ வெற்றி பெற்றார். லஸ்ஸோவின் வலதுசாரிக் கொள்கை களுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பால் அவற்றிற்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்று வந்தன. நாடாளுமன்றத்தில் லஸ்ஸோவுக்கு எதிராக பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரும் அளவிலான ஆதரவு அதற்கு இருந்ததால், தான் பதவியை விட்டு நீக்கப்பட்டது உறுதி என்று தெரிந்து, ஆகஸ்டு 20 அன்று பொதுத் தேர்தல்கள் நடை பெறும் என்று அறிவித்தார். போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதும் தெரிந்ததால், வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறிவிட்டார்.
ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று 1 கோடியே 30 லட்சம் பேருக்கு மேல் வாக்களிக்க வுள்ளனர். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதி பதி ஆகியோரோடு 137 நாடாளுமன்ற உறுப்பினர்க ளும் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி ரபேல் கோரியா தலைமை யிலான யூனியன் ஃபார் ஹோப் என்ற இடது சாரிக் கட்சியின் வேட்பாளர்கள் இறுதிப்படுத்தப் பட்டு விட்டார்கள். ஜனாதிபதி வேட்பாளராக லூயிஸ் கொனேசால்வஸ் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆண்ட்ரூஸ் அரவுஸ் ஆகியோர் களமிறங்குகிறார்கள். இடதுசாரிகளின் சார்பில் முதலில் ஜார்ஜ் கிளாஸ்தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி யிடுவதாக இருந்தது. அவர் ரபேல் கோரியா மற்றும் லெனின் மோரினோ ஆகிய இருவரும் ஜனாதிபதியாக இருந்தபோது, துணை ஜனாதிபதி யாகப் பணியாற்றினார். வலதுசாரிகளின் ஆட்சிக் காலத்தில் அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறச் செய்தார்கள். அதன் மீது மேல் முறையீடு நடைபெற்று வந்தாலும், தான் தேர்தலில் போட்டி யிடுவது கட்சியின் வெற்றிக்கு இடையூறாக இருக்கலாம் என்று கிளாஸ் கருத்து தெரிவித்தார். இதனால் லூயிஸ் கொன்சால்வஸ் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி வாய்ப்பு
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் இடதுசாரிகளே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இடது சாரிகளுக்கே அதிக உறுப்பினர்கள் இடம் பெற்றார்கள். முதல் சுற்றில் வெறும் 19.7 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்ற வலதுசாரி வேட்பாளர் இரண்டாவது சுற்றில் 52.4 விழுக்காடு வாங்கி வெற்றி பெற்றது அரசியல் வட்டாரங் களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு நாடாளு மன்றம் வேகத்தடை போட்டு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து நாடாளுமன்றத்தின் மூலமாக ஜனாதிபதியை வெளியேற்றும் தீர்மானம் விவாதத்தில் இருந்து வந்தது. அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தனது பதவி பறிபோவது உறுதி என்று உணர்ந்த தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, அனைத்துப் பொறுப்புகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்துவது என்று முடிவெடுத்தார். இந்த முடிவை ஏற்காவிட்டாலும், லஸ்ஸோவை வெளியேற்ற இதுவும் ஒரு வாய்ப்புதான் என்று இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கருத்துக் கணிப்புகளில் இடதுசாரி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளன.