அமெரிக்காவில் நிலவும் அமைப்பு ரீதியான நிறவெறி பாரபட்சத்தை தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவை மக்கள் சீனம் வலியுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ராணுவத்தை நிறுத்தி கலகங்களை மூட்டி வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கப் போகிறது என்று சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் உள்ள படைகளின் எண்ணிக்கையை ரஷ்யா குறைத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவோ படைகள் எண்ணிக்கை குறையவில்லை என்றும், அதிகரித்திருக்கிறது என்று பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், சீனா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.
இந்நிலையில்தான், அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதை சீனா சுட்டிக்காட்டியுள்ளது. அங்கு நிலவும் நிறவெறியால் இன ரீதியாகவும், ஆசியாவைத் தாயகமாகக் கொண்டவர்களையும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க சமூகத்தில் ஆழமாக வேர்விட்டு நிறவெறி வளர்ந்துள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தியாளர் வாங் வென்பின் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியர்களுக்கு எதிரான இயக்கங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மீது வெறுப்புணர்வு கிளப்பி விடப்படுகிறது. இதனால் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் துவக்கத்திலேயே 76 விழுக்காடு தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை வாங் வென்பின் சுட்டிக்காட்டுகிறார். அமெரிக்காவில் உள்ள இளம் ஆசியர்களில் 25 விழுக்காட்டினர் இது போன்ற தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இது போன்ற தாக்குதல்கள் பல ஆசிய நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. இந்த நிறவெறிக்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கைகள் மிகவும் தேவையானதாகும். வன்முறை மற்றும் அச்சத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதைத் தருவது அரசின் கடமை என்று அமெரிக்க அரசை வாங் வான்பென் வலியுறுத்தியுள்ளார்.