world

கிரீஸ் : ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

ஏதென்ஸ், ஜூன் 26- கிரீசில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி 158 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு 158 இடங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மை பலத்திற்கு 151 இடங்கள் தேவை என்ற நிலையில், ஏழு இடங்களைக் கூடுதலாகப் பெற்று ஆட்சியமைக்கிறார்கள். புதிய தேர்தல் சட்டப்படி முதலிடம் பிடிக்கும் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கின்றன. இந்த அடிப்படையிலேயே ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்திவிட்டு, ஆட்சியமைக்கையில் அவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதால் இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிரிசா மற்றும் பசோக் ஆகிய கட்சிகள் தங்கள் செல்வாக்கை இழந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் மே மாதத்தில் நடந்த தேர்தலில் கிடைத்ததைவிட குறைவான விழுக்காடு வாக்குகளையே பெற்றிருக்கின்றன. அதேவேளையில், கடந்த பத்து ஆண்டுகளில் 5 விழுக்காடு வாக்குகளையே பெற்று வந்த கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு வாக்குகளைத் தற்போது பெற்றுள்ளது. மக்களுக்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதே வாக்குகள் அதிகரிப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிதீவிர வலதுசாரிகளும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பத்து இடங்கள் கிடைத்துள்ளன.