உப்பு அதிகம் சேர்ப்பது மரண அபாயத்தை அதிகரிக்கலாம் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சமீபத்தில் ஆராய்ச்சி எச்சரிக்கை விடுக்கிறது.
‘உப்பில்லா உணவு குப்பையிலே’ என்கிற பழமொழிக்கு ஏற்ப உணவில் ஒரு சிட்டிகை உப்பு கூடினாலோ குறைந்தாலோ அந்த உணவு எத்தனை சுவை மிகுந்ததாக இருந்தாலும் உண்ண முடியாது. அதற்காக அதை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்வது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவை பொருத்து அமைகிறது.
உதாரணமாக அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியம் தேவை இருக்கும். சராசரியாக ஆரோக்கியமான உடலைக் கொண்டோருக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2300 மில்லிகிராம் அளவு சோடியம் போதுமானது. இது கிட்டதட்ட ஒரு மேசைக்கரண்டி உப்பாகும். ஆனால் இந்தியர்கள் 10 முதல் 12 கிராம் சோடியம் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்கின்றனர். இது உண்ணும்போது, சமைக்கும்போது என இருமுறை அவர்களின் தேவைக்கு ஏற்ப கூட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு எடுத்துக்கொள்வதில் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக கூறிய அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உப்பை அதிகம் உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் 28 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக 40 முதல் 69 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 100 பேரில் 3 பேர் முன்கூட்டியே இறக்கின்றனர். உப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இந்த வயதினரில் 100ல் கூடுதலாக ஒருவர் இறப்பதாக ஆய்வு கூறுகிறது. உணவில் எப்போதும் உப்பு சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் ஆயுளில் 1.5 ஆண்டுகள், 2.28 ஆண்டுகள் குறைத்துக் கொள்கின்றனர்.
ஆனால், இந்த ஆய்வுக்கு தொடர்பில்லாத ஸ்வீடனின் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் மருத்துவ பேராசிரியருமான பேராசிரியை அன்னிகா ரோசெங்ரென், உப்பை அதிகம் குறைத்தாலும் பாதிப்பு என்று கூறுகிறார்.
உணவில் உப்பு சேர்ப்பதை கொஞ்சமாக குறைத்தால்கூட, கணிசமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என அமெரிக்காவில் உள்ள பொது சுகாதார மருத்துவ பள்ளியை சேர்ந்த பேராசிரியர் லு குய் தெரிவித்தார்.