வார்சா, ஜூன் 7- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் வலதுசாரி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற கண்டனப் பேரணியில் 25 லட்சம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள். பல ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் கொண்ட போலந்தையும் விட்டுவைக்கவில்லை. நெருக்கடிகளைப் போக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் களம் இறங்கினால் கடுமையான அடக்குமுறையை மக்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நெருக்கடிகளால் பெரும்பாலான மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்தப் பேரணி நடைபெற்றது. தலைநகர் வார்சா உள்ளிட்ட பல நகரங்களில் இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டன. வார்சா மற்றும் கிராகோவ் நகரங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் என்று சொல்லுமளவுக்கு மக்கள் பங்கேற்பு இருந்தது. தனது இணையர் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளோடு இந்தக் கண்டனப் பேரணியில் ராடெக் டஸ்கின்ஸ்கி என்ற தொழிலாளி கலந்து கொண்டார். அவரின் கைகளில் “நான் பெற்ற சுதந்திரத்தை இழக்க மாட்டேன்” என்று எழுதப்பட்ட பதாகையும், அதே வாசகங்கள் எழுதப்பட்ட மற்றொரு பதாகை அவர்களின் குழந்தை படுத்திருந்த தள்ளுவண்டியில் செருகப்பட்டிருந்தது. செய்தியாளர் அவரிடம் கேட்டபோது, “எங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுதந்திரமான நாடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.