world

img

4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவை காய்ச்சல்!

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவை காய்ச்சல் நோய் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின், மேற்குவங்க மாநிலத்தில் ஏவியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2) என்ற வைரசால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் 4 வயது ஆண் குழந்தையை பாதித்துள்ளது. அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2-வது பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில், எச்9என்2 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குழந்தைக்கு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் சுவாச நோயின் அறிகுறிகள் இல்லை. மேலும் இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதல்ல என கூறப்படுகிறது. அரிதான இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 2வது முறையாக பதிவாகியுள்ளது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.