காசாவில் டெயிர் அல்-பாலா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான் யூனிஸ் சிட்டி அருகேயுள்ள அபாசன் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீதான இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பானி சுஹைலா நகரில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், போரால் இடம்பெயர்ந்து மத்திய கான் யூனிஸ் பகுதியில் தங்கியுள்ள பாலஸ்தீன மக்களின் கூடாரங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் சனிக்கிழமை இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.