ஸ்பெயினில் இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்ததாக ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியது.
இதுதொடர்பாக, ஸ்பெயினில் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித்தொடர்பாளர் ஹெர்வெல்லா கூறியதாவது, கடந்த 10 நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்த ஆண்டு இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், 241 பேர் 75 முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள், 88 பேர் 65 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். வெப்பம் அலைக்கு சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிகளவில் இறந்துள்ளனர். இளைஞர்களிடையே முழுமையாக எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்களே எனக் கூறினார்.
இது ஸ்பெயினில் இந்தாண்டில் ஏற்பட்ட 2ஆவது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. முதல் வெப்ப அலை கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நீடித்தது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால் 829 பேர் உயிரிழந்துள்ளனர்.