வருங்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சிகளை கூடுதல் தயாரிப்புகளோடு எதிர்கொள்ளும் வகையில் இருப்பதற்காக சர்வதேச வறட்சிக் கூட்டணியை உருவாக்க நாடுகள் முடிவு செய்துள்ளன.
எகிப்து நாட்டில் சர்வதேச காலநிலை பற்றிய 27வது சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, செனகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளின் முன்முயற்சியில் சுமார் 50 நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து சர்வதேச வறட்சி எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. "வறட்சிக்கும், காலநிலை மாற்றத்திற்கும் எதிராக பூமியின் எதிர்ப்புக்குத் தேவையான அரசியல் உத்வேகத்தைத் தரவே இந்த கூட்டணி" என்று ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் செனகல் ஜனாதிபதி மாக்கி சால் ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் குறித்துப் பேசிய ஐ.நா.குழுவின் அதிகாரிகளில் ஒருவரான இப்ராகிம் தியாவ், "வறட்சி என்பது இயற்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துதான் என்றாலும் அது ஒரு மனிதப் பேரழிவாக மாற வேண்டிய அவசியமில்லை. தீர்வுகள் நம்மிடம் இருக்கவே செய்கின்றன. நமது லட்சியத்தை அதிகரிப்பது, அரசியல் உறுதியைப் பலப்படுத்துவது மற்றும் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைப்பது ஆகியவற்றின் மூலம் வறட்சியை எதிர்ப்பதற்குத் தயாரான உலகத்தை உருவாக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.
இந்த சர்வதேச வறட்சி எதிர்ப்புக் கூட்டணியின் செயல்பாடுகளுக்கு 50 லட்சம் யூரோக்களைத் தருவதாகக் கூட்டத்தில் ஸ்பெயின் அறிவித்தது. அதோடு மேலும் தேவையான உதவிகளைப் பெற முனைப்புடன் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டது. சர்வதேசக் கூட்டணியின் வாயிலாக பிராந்திய அளவிலான கூட்டணிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள முன்னெச்சரிக்கை மையங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்ய முடியும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.