பொதுக்கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்காக மக்கள் உருகுவே நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில் பங்கேற்றனர்.
உருகுவேயின் தலைநகர் மான்டிவிடியோவில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்கு உருகுவே ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. ஆனால், இந்தப் பேரணியில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பங்கெடுத்தனர். பொதுக்கல்வி என்பது நாட்டின் மேம்பாட்டிற்கு முக்கியம் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லகால்லே தலைமையிலான நிர்வாகம் கல்வித்துறையிக்கான செலவினங்களைக் குறைத்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்த செலவுக்குறைப்பால் கல்வித்துறையின் முன்னேற்றம் தடைபடும் சூழல் எழுந்துள்ளது. குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஹெக்டர் கேன்செலா கோரிக்கை வைத்துள்ளார்.
தேசிய இடைநிலை ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவரான எமிலியானோ மாண்டெசென், "பெரும் அளவில் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றிருக்கிறார்கள். அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் வர வேண்டும் என்று கோருகிறோம்" என்று தெரிவித்தார். ஆசிரியர்களின் சம்பளத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத முடிவுகள் புதிய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.