world

img

அமெரிக்காவே உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் - சீனா கருத்து

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் உலகிற்கு உண்மையான அச்சுறுத்தலாக அமெரிக்காவே இருக்கிறது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நடந்த ஆயுதந்தாங்கிய போர்களில் 80 விழுக்காடு போர்கள் அமெரிக்காவால்தான் நடத்தப்பட்டன என்று புள்விவிபரங்களோடு சீன வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவில் உள்ள சீனத்தூதரகமும் இதைத் தெரிவித்திருக்கிறது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதிலிருந்து இந்த நூற்றாண்டின் துவக்கம் வரையில் நடந்த பல்வேறு போர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டை சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் வைத்துள்ளார்கள்.

உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ள வேளையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சீன ராணுவம், தன் விரல்களை அமெரிக்காவை நோக்கி நீட்டியுள்ளது. 1945 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையில் ஏராளமான போர்கள் நடந்துள்ளன. உலகம் முழுவதும் 153 பகுதிகளில் இந்தப் போர்கள் நடத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் நடந்த போர்களின் எண்ணிக்கை 248 ஆகும். அவற்றில் அமெரிக்காவால் துவக்கப்பட்ட போர்களின் எண்ணிக்கை 201 ஆக உள்ளது என்று சுட்டிக்காட்டும் சீனத் தூதரகம், இந்த உலகின் உண்மையான அச்சுறுத்தலே அமெரிக்காதான் என்பதை மறந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறது.

எரியும் நெருப்பை அணைக்க மற்றவர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்லும் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம்தான் தற்போது உக்ரைனில் நிலவும் போருக்குக் காரணமாகும் என்று குற்றம் சாட்டும் சீனத் தூதரகம், "ஜோ பைடன் நிர்வாகம்தான் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது" என்று குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் போர்களைத் துவக்கியது அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டை ரஷ்யாவும் முன்வைத்துள்ளது.

இது குறித்து "அண்டை நாடுகளுடன் மேற்கொண்ட போர்களின் எண்ணிக்கையில் நிச்சயமாக அமெரிக்காவுடன் எங்களால் போட்டியிட முடியாது" என்று நையாண்டியாக ரஷ்யாவின் ஐ.நா.சபைப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அமெரிக்கா பாடம் எடுக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.