அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ மீண்டும் போட்டியிடவிருக்கிறார்.
ஆளும் தாராளவாதக் கட்சியின் வேட்பாளாக போல்சோனாரோ நிற்பார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான லூலாவை எதிர்த்து ஜெய்ர் போல்சோனாரோ போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது உண்மைதான் என்பதை ஆளும் தாராளவாதக் கட்சியினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது.
போல்சோனாரோதான் ஜனாதிபதி வேட்பாளர் என்று உறுதி செய்துள்ள ஆளும் கட்சி, அவரோடு துணை ஜனாதிபதிப் பொறுப்புக்கு ஜெனரல் வால்டெர் பிரகா நேடோ போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளது. கட்சியின் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி போல்சோனாரோ, பிரேசிலின் உச்சநீதிமன்றத்தைக் கடுமையான விமர்சித்தார். தன் மீது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்குதலை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் இந்தக் கூட்டத்தில் 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது பேசிய போல்சோனாரோ, "ஒவ்வொரு நாளும் நான் எழும்போது இந்த நாட்டு மக்கள் மீண்டும் கம்யூனிசத்தின் வலிகளை அனுபவிக்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்" என்றார். அவரது பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்திய வலதுசாரிக் கொள்கைகள் மக்களை நெருக்கடியில் தள்ளி, துயரத்தில் ஆழ்த்தியது. அவரது ஆட்சிக்கு முன்பு, இடதுசாரி அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலக் கொள்கைகளை "கம்யூனிசத்தின் வலிகள்" என்று பொய்ப் பிரச்சாரத்தை போல்சோனாரோ மேற்கொண்டு வருகிறார்.