பாகிஸ்தானில் தொடர்ந்து கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் பலூசிஸ்தான், கைபர் பக்துவா ஆகிய மாகாணங்களில் கனமழை விடாமல் கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக 8 அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இந்த ஆண்டு பருவமழை இதுவரை 86 விழுக்காடு அளவுக்கு பெய்துள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.