world

img

பாகிஸ்தான் : நெருக்கடி முற்றுகிறது ஆகஸ்டு மாதத்தில் தேர்தல்?

பாகிஸ்தான் ஆளும் கூட்டணியிலிருந்து முக்கியமான கூட்டாளியான முத்தாஹிதா காவ்மி இயக்கம் விலக முடிவு செய்துள்ளதால் ஆட்சிக்கான நெருக்கடி முற்றியுள்ளது.
பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று கோரி வருகின்றன. அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தனக்கு எதிராகக் கொடி பிடிப்பது வெளிநாட்டுச் சதி என்றும், அதற்கான ஆதாரங்கள் தன் வசம் இருப்பதாகவும் இம்ரான் கான் சொல்லி வந்தார். மக்களிடம் பேசப் போவதாக அறிவித்த அவர் அதிலிருந்து பின்வாங்கினார். இந்நிலையில்தான் கூட்டாளிக்கட்சி தனது ஆதரவை நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அளிக்கப்போவதாக அறிவித்தது.
தங்களுக்குள் ஒரு உடன்பாட்டை எட்டியிருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், "ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளும், முத்தாஹிதா காவ்மி இயக்கமும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன. இது குறித்த விபரங்களை விரைவில் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வோம். பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்" என்று எழுதியிருக்கிறார்.
பாகிஸ்தான் விடுதலை பெற்றதில் இருந்து இதுவரையில் ஒரு பிரதமர் கூட தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. இம்ரான் கானுக்கும் அதே நிலைமைதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் மிரட்டல்களுக்கு பணிய மாட்டார் என்று கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சிகளோடு உடன்பாட்டை எட்டும் வகையிலான பேச்சுவார்த்தைகளும் தனியாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஆகஸ்டில் தேர்தல்?
நம்பிக்கையில்லா தீர்மானத்தை விலக்கிக் கொண்டால், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற சமரசங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், கூட்டாளிக்கட்சியின் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. 2018 ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது.