சனா, மார்ச் 8- பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏமனுக்கு வரவிடாமல் தடுக்கும் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபிய கூட்டுப் படைகளுக்கு ஏமன் மக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏமனின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றனர். தலைநகர் சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முற்றுகையைக் கைவிடுக என்ற கோரிக்கை முழக்கம் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் வலம் வந்தனர். பெட்ரோலியப் பொருட்கள் ஏமனுக்கு கிடைக்க விடாமல் செய்வதில் அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி அரேபியா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தப் பேரணிகளில் ஏமனின் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். அவர்கள் பேசுகையில், “சவூதி அரேபியாவின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி தரப்படும். இழப்புகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
எந்தவிதமான அழுத்தத்தையும் ஏமன் தாங்கிக் கொள்ளும். சரண் அடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவமானத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று குறிப்பிட்ட அவர்கள், நாட்டின் வளங்களை முடக்குவதற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அந்நியத் தாக்குதல்களுக்கு எதிராகத் தலைநகர் சனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபோன்ற திரட்டல்கள் தலைநகர் சனாவில் நடப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இம்முறை சனாவைத் தாண்டி ஏமனின் பல்வேறு நகரங்களில் பெரும் அளவில் மக்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். சவூதி அரேபியாவிற்கு முழு ஆதரவை அளித்து வரும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களும் மக்களால் எழுப்பப்பட்டன. உக்ரைன் விவகாரத்தில் செலுத்தும் கவனத்தில் 25 விழுக்காடாவது எங்கள் மீது செலுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையை ஏமன் வலியுறுத்தியுள்ளது. ஏமன் மக்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான ராணுவக் கூட்டணி பெரும் குற்றங்களை செய்து வருகிறது. இந்தக் கூட்டணியில் உள்ள நாடுகள் ஐ.நா.சபையில் இடம் பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ஏமன் போராட்டக்காரர்கள், ஐ.நா.சபையின் மவுனம் நியாயமற்றது என்று குற்றம்சாட்டியுள்ளார்கள்.