கொலம்பியாவின் புதிய அமைச்சரவையில் மூன்று பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கிறார்கள்.
ஜூன் 19 ஆம் தேதியன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ, ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று பொறுப்பேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில் யார், யார் இடம் பெறப் போகிறார்கள் என்ற விபரங்கள் வெளியாகி வருகின்றன. அர்ஹூவாகோ, நாசா மற்றும் எம்பெரா என்ற மூன்று பழங்குடியினத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகிறார்கள்.
மாக்டலீனா என்ற பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த அர்ஹூவாகோ பிரிவைச் சேர்ந்தவரின் பதவியேற்பு, மிகவும் வறிய மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினரின் பல பிரிவினருக்கு உத்வேகத்தை அளிக்கும் நிகழ்வாக இருக்கப் போகிறது. அந்தப் பழங்குடியினத்தைச் சேர்ந்த லியோனார் ஜலபடா டாரெஸ், ஐக்கிய நாடுகள் அவைக்கு கொலம்பியாவின் தூதுவராகப் பொறுப்பேற்கப் போகிறார். இவர் அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என்பதைத் தாண்டி, பழங்குடி மக்களின் உரிமைக்கான போராளி என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளார்.
நாசா பழங்குடியினத்தைச் சேர்ந்த சமூகவியல் வல்லுநரான கியோவானி யுலே, நில மீட்புக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கப் போகிறார். இவர்களைப் போன்றே, எம்பெரா பழங்குடியினத்தைச் சேர்ந்த மரியா பேட்ரிசியா டோபோன் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவுக்கான தலைவராகப் பொறுப்பேற்கிறார். மேலும் பல்வேறு பழங்குடியினத் தலைவர்கள் மிக முக்கியமான பொறுப்புகளில் இடம் பெறப் போகிறார்கள்.