world

60 ஆண்டுகளாக மக்களை காப்பாற்றும் பணியில் கியூபா

ஹவானா, மே 24- பல்வேறு நாடுகளுக்கு தங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி ஏராளமான மக்களைக் காப்பாற்றும் பணியைக் கடந்த 60 ஆண்டுகளாக கியூபா செய்து வருகிறது. 1963 ஆம் ஆண்டு முதல் சுமார் 165 நாடுகளுக்கு கியூப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றிருக்கிறார்கள். அந்த நாடுகளில் 30 லட்சம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 1 கோடியே 60 லட்சம் அறுவை சிகிச்சைகள் இவர்களால் கையாளப்பட்டுள்ளன. இவ்வாறு மருத்துவப் பணிகளை கியூபா தொடங்கியதன் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கியூப அரசு கொண்டாடியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு சென்ற மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் ஐடேல் காப்ரிரா, “இந்த வெள்ளை நிற உடை அணிந்த மகத்தான மருத்துவ ராணுவத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு பெரு மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பணிகள் மற்றும் முனைப்பு ஆகியவை பற்றி ஒட்டுமொத்த உலகிற்கே தெரியும். நாங்கள் பெருமையடைகிறோம்” என்று குறிப்பிட்டார். அல்ஜீரியாவின் பிரதமர் அகமது பென் பெல்லாவின் வேண்டுகோளை ஏற்று கியூபாவின் மருத்துவக் குழு 1963 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று அங்கு அனுப்பப்பட்டது. அந்த சமயத்தில்தான் பிரான்சின் காலனி ஆதிக்கத்தில் இருந்து அல்ஜீரியா விடுதலை பெற்றிருந்தது. பிற நாடுகளின் மக்களுடனான ஒற்றுமை மற்றும் அவர்களுக்கு ஆதரவு தருவது நமது கடமை என்று பிடல் காஸ்ட்ரோ அப்போது குறிப்பிட்டிருந்தார்.