world

img

ஹமாஸ் அமைப்புடன் 4 நாள் போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு!

46-ஆவது நாளாக போர் நீடித்து வந்த நிலையில் 50 பிணைக் கைதிகளை விடுவிக்க, ஹமாஸ் அமைப்புடன் 4 நாள் போர் நிறுத்தம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை இஸ்ரேல் மிகவும் உக்கிரமாக 46-ஆவது நாளாக நடத்தி வருகிறது.

போர் தொடங்கியதில் இதுவரை இருதரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன.

காஸாவில்மட்டும் 14,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

போரை நிறுத்த ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உலக நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.

அதேசமயம் ஆதரவு கரம் நீட்டுகிறேன் என்ற பெயரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளைக் கொம்பு சீவி விடும் வேலையை சில நாடுகள் செய்து வருகின்றன.

இந்நிலையில் கத்தார் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்காலிகமாகப் போரை நிறுத்த இஸ்ரேல் அரசு முன்வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் மட்டும் போர் நிறுத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின் படி இருதரப்பிலும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காசா பகுதிக்குள் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். எந்த ஒரு ராணுவ வாகனங்களும் இயக்கப்படாது. தாக்குதல் நடத்தவோ, கைது செய்யவோ மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் சிறையிலிருந்து 150 பாலஸ்தீனிய பெண்களும், குழந்தைகளும் விடுவிக்கப்பட உள்ளனர்.

காசாவிற்குள் 300 ட்ரக்குகளில் நிவாரணப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும்.

நாள் ஒன்றுக்கு 6 மணி நேரத்திற்கு ட்ரோன்களை பறக்க விட மாட்டோம் என்று இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் போர் பாதித்த பகுதிகளில் செஞ்சிலுவை சங்கத்தினர் நேரில் பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவர். இருதரப்பிலும் விடுவிக்கப்படும் பிணையக் கைதிகள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப உதவிகள் செய்வர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் போரில் இருக்கிறோம். அதில் தொடர்ந்து ஈடுபடுவோம். இஸ்ரேல் தனது இலக்கை அடையும் வரை ஓயாது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக ஒழித்துக் கட்டுவோம்.

இனிமேல் இஸ்ரேலை காசா ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அப்படி ஒரு நடவடிக்கையை எடுப்போம் என்று கூறியுள்ளார்.