இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் பதவி விலக கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ளநிலையில் ராஜபக்சே தப்பி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை பெரும் பகுதி சுற்றுலா வருவாயை நம்பியிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக அந்நாட்டில் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில் தவறான பொருளாதார கொள்கை மற்றும் ராஜபக்சே குடும்பத்தினரின் ஊழல்,உள்ளிட்ட காரணங்களால் கிட்டத்தட்ட இலங்கை திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் மின்சார தட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நெருக்கடி குழந்தைகளின் கல்வியையும் விட்டு வைக்காததால் இலங்கையின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதன் காரணமாக இலங்கை மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனால் வேறு வழியின்றி மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சேவும் பதவி விலகக்கோரி ஆங்காங்கே தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கோத்தபய ராஜபட்சேவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போராட்டம் வலுத்ததை தடுக்க, காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினர். மேலும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினரின் தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். மேலும் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதில் இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவும் காயம் அடைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் கொழும்புவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்த நிலையில், நேற்று இரவே கோத்தபய ராஜபக்சே பத்தர முல்லையில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே கப்பலில் ஏறி தப்பிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பொதுஜன பெரமுனா கட்சியை 16 எம்பிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்களின் உணர்வை மதித்து இலங்கை அதிபர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளன நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பதவி விலகும் கோரிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கோத்தபய ராஜபக்சே அறிக்கை வெளியிட்டுள்ளார்.