world

img

ஜி7 மாநாடு: இத்தாலியில் தொடங்கியது

ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இத்தாலியில் வியாழக்கிழமை தொடங்கியது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி7.

அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 50-ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணம், பசானோ நகரில் வியாழக்கிழமை தொடங்கியது.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். இது தவிர, அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஷால்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் ஜனாதிபதி ஸேலென்ஸ்கி, துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்களும், கத்தேலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸும் கலந்து கொள்கின்றனர்.

ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜியேவா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் காசா போர், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய சொத்துக்கள் மூலம் உக்ரைனுக்கு நிதியுதவி

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு 5000 கோடி டாலர் (சுமார் ரூ.4.18 லட்சம் கோடி) கடனுதவி அளிக்க ஜி7 மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமை உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனைச் சேர்ந்த 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.இருந்தாலும், உள்ளூர் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியளிப்பதில் அந்த நாடுகள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷிய சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நீண்ட காலமாகவே கூறி வந்தனர்.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தங்கள் மீதே தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது திருட்டுச் செயலுக்கு சமம் என்று ரஷியா கண்டனம் தெரிவித்து வருகிறது.

அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சொத்துகளை பாதுகாக்க முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும்.அது, அந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இருப்பினும், தங்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷிய சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க ஜி7 தலைவர்கள் தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.