அமெரிக்காவில் முதல்முறையாக ஒருவருக்கு ஹெச்5என்1 வகை வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோவில் வசிக்கும் கோழி பண்ணையாளர் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பாதிக்கும் ஹெச்5என்1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொலராடோ மாகாண நிர்வாகம் கூறியுள்ளது.
இதையடுத்து அந்த நபர் குணமடையும் வரை அவரை தனிமைப்படுத்தி ஒசெல்டமிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அமெரிக்க நோய்கள், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமான சிடிசி தெரிவித்துள்ளது.
மேலும், தொற்று பாதித்த நபர் தனது கோழிப்பண்ணையில் ஹெச்5என்1 வைரஸ் தொற்றால் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கோழிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.