what-they-told

img

கொரோனா நிவாரணத்தை உயர்த்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை, ஜூன் 3- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து ரூ.9000 ஆக உயர்த்தி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,“விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவராக உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தைப் பொருத்தவரை கட்டுமானத் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், அச்சகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். நோய்ப் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் அவர்கள் வேலைக்குச் செல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், அரசு ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது போதுமானது அல்ல.

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கான மருத்துவ செலவுகளும் உள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் என்பது மூன்று நேர உணவை முழுமையாக உண்ண போதுமானதாக இல்லை. எனவே  இந்தக் கோரிக்கைகளோடு உயர்ந்து வரும் விலைவாசியையும் கருத்தில் கொண்டு, அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு  இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய  மனுவை தள்ளுபடி செய்தனர். அதேநேரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க, தமிழக அரசு பதிலளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

;