பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் நகருக்கு அருகிலேயே 1880 இல் ஒரு சிறு நகரத்தை வில்லியம் ஹெர்பர்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இப்போது ஸ்டீவஸ்டன் என்கிற மீனவர் பகுதி. ஃபிரேசர் ஆற்றின் தென் கரையோரம் இருக்கும் இந்த கிராமம்தான் சால்மன் மீன் பிடிப்பு மையமாக இருக்கிறது. இந்த இடம் ரிச்மாண்டு லூலூ தீவுக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ஒருமுறை கனடா தின (ஜூலை 1 ஆம் நாள்) விழா இங்கே ஸ்டீவஸ்டன் சால்மன் விழாவாக நடந்திருக்கிறது. பசிபிக் சமுத்திரத்தில் இருந்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு ஆற்றின் வழியாக முட்டையிடச் செல்லும் சால்மன் மீன்களைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் மீனவர்கள். மீன்கள் என்று சொன்னதும் அருள்பாரதி சொன்ன கனடாவின் ஐமேக் திரையரங்க அனுபவம் நினைவுக்கு வந்தது. பசிபிக் சமுத்திரத்தின் கரையில் கனடா பேலஸூக்கு முன்னால் ஐமேக் திரையரங்கம் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரையரங்கத்திற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சிறப்புப் படங்களையும் முப்பரிமாணப் படங்களையும்தான் பார்க்க முடியுமாம். திரையரங்குக்குள் செல்கிறபோதே முப்பரிமாணக் கண்ணாடி கொடுப்பார்களாம். ஒருமுறை அவன் கடல்வாழ் மீன்கள் பற்றிய சிறப்புப் படம் பார்த்ததாகச் சொன்னான். மீன்கள் கையில் பிடிபட்டு நழுவிச் செல்வதுபோலவும், சுறா மீன்கள் வாயைத் திறந்துகொண்டு கொல்ல வருவது போலவும் இருக்குமாம். ஃபிரேசர் ஆற்றங்கரையோரத்தின் ஸ்டீவஸ்டன் மீனவ கிராமத்தில் சால்மன் மீன்கள் குழந்தைகளைப் போன்று நீந்திச் சென்றன.கிராமத்தையொட்டி ஒரு கட்டடம் இருந்தது. அங்கு ஆயுதங்கள் போலவும் பல்வேறு பொம்மைகளின் வடிவிலும் வெளியே வடிவமைத்து வைத்திருந்தனர்.
எதிர்ப்புறத்தில் மிகவும் பிரபலமான பீட்சா கடை ஒன்றிருந்தது. தேவையைச் சொன்னதும் சுடச்சுட பீட்சா ஒன்று செய்து தந்தார்கள். உண்மையிலேயே அந்தச் சுவை பிரத்யேகமாகத்தான் இருந்தது. அதில் நிரப்பப்பட்டிருந்த சால்மன் மீன்கள் தன் ருசியை அதிகரித்துத் தந்திருக்குமோ என்னவோ? 1877-1878 ஆம் ஆண்டுகள் வாக்கில் நியு பிரன்ஸ்விக் என்கிற பகுதியிலிருந்து தனது குடும்பத்துடன் வந்த மேநோ ஸ்டீவ்ஸ் என்கிறவர் நினைவாக இந்த கிராமத்திற்கு ஸ்டீவஸ்டன் கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளது.1889 இல் ஸ்டீவின் மகன் வில்லியம் ஹெர்பர்ட் ஆல் உருவாக்கப்பட்டதுதான் இந்த கிராமம். சால்மன் மீன் பிடிப்புத் தொழில் 1871 இல் தொடங்கியது. 1890 ஆம் ஆண்டு வாக்கில் 45 மீன்பிடி மையங்கள் இருந்தன. சால்மன் மீன்களால்தான் இந்தப் பகுதி இவ்வளவு வளம் பெற்ற பகுதியானது. அதனால்தான் சால்மனோபாலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோடையிலும் ஜப்பான், சீனா, கனடா நாட்டு முதல் (ஆதி) குடிமகன்கள், ஐரோப்பிய மீனவர்கள், பதப்படுத்தும் தொழிலாளிகள் என இந்த கிராமத்தை வந்து சூழ்ந்து விடுகிறார்கள். ஆண்டு முழுவதும் இங்கேயே தங்கித் தொழில் செய்கிறார்கள். இது மீன்பிடியோடு நின்றுவிடுவதில்லை. இதன் தொடர்பாகக் கப்பல் கட்டுதலும் படகு கட்டுதலும் நடைபெறுகின்றன.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதப்படுத்திய சால்மன் மீன்களுக்காக இங்கு நல்ல கிராக்கி இருக்கிறது. முதல் உலகப் போருக்கு முன் இந்த கிராமம் சால்மனோபாலிஸ் என்றுதான் அழைக்கப்பட்டதாம். இது வான்கூவர் நகருக்கே போட்டியாகக் கருதப்படும் நிலையிருந்தது. ஆனால் மீன் பதப்படுத்தும் தொழில் நலிவடையத் தொடங்கி 1990 ஆண்டு வாக்கில் தனது தொழில் செல்வாக்கை இழந்துவிட்டது. அதனால்தான் முதன் முதல் இந்த கிராமத்தைப் பார்க்கிறபோது என்னையறியாமலே ஒரு சிதைந்த கனவு ஒன்றினைக் காண்பது போலத் தோன்றியது. இன்று ஜியார்ஜியா வளைகுடாவில்தான் பதப்படுத்தல் தொழில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தப் புதிய இடம்தான் 1994 இல் கனடாவின் தேசிய வரலாற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. கனடாவின் சிறந்த தேசிய வரலாற்றுப் பகுதிக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய கனடாவினர் ஸ்டீவஸ்டன் கிராமத்தின் பெரும்பான்மையான மக்களில் கணிசமானவர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப் போர்தான் பெருமளவில் இந்த மக்கள்தொகை குறைவதற்குக் காரணமானது. ஏனெனில், பெரும்பான்மையானவர்கள் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப் படவோ, கண்காணிப்புக்கு உள்ளாக்கவோ படவேண்டிய சூழல். எனினும் இன்னும் குறிப்பிட்ட அளவில் ஜப்பானியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஜப்பானிய ஜூடோ மற்றும் பிற வீரவிளையாட்டுக்கலை மையங்கள் இன்றும் ஸ்டீவஸ்டன் கிராமத்தின் அடையாளமாக இருக்கின்றன. இன்று மீன்பிடி துறைகள் அங்கிருந்தாலும் பெரும்பாலும் அந்தப் பகுதி வணிக மையமாகவும், சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. அதுமட்டுமல்ல, இங்கு திரைப் படங்களுக்காகவும், தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் படப்பிடிப்புகள் நடத்துகிறார்கள். சரி, மீன்பிடி கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்று அருள்பாரதியிடம் கேட்டேன். இவ்வளவு நேரம் நாம் பார்த்ததுதான் மீன்பிடி கிராமம் என்றான். ஆச்சரியமாக இருந்தது. அகல அகலமாக வீதிகளை ஒட்டிய பெரிய பெரிய வீடுகள்தான் மீனவர்களின் வீடுகள் என்றறிய முடிந்தது. மீனவர் கிராமம் என்றதும் வெறும் குடிசைகள்தான் என்கிற கற்பனைக்கு நான் மட்டுமா பொறுப்பு? -பயணிப்போம்