ஜூலியஸ் பூசிக் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வீரனின் நினைவு நாள் இன்று. செக்கோஸ்லேவேகியாவில் உதித்த ஜூலியஸ் பூசிக் தமது 12ஆம் வயதிலேயே இலக்கியங்களைப் படைத்தவர். செக்கோஸ் லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் பணியாற்றியவர். பத்திரிக்கையாள ராகவும் போராளியாகவும் திகழ்ந்தவர். 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுச் சமர் செய்தவர். இரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் எதிர்ப்பு முன்னணியில் முனைமுகத்து நின்றவர். அவரது வீரம்மிக்க செயல்பாடுகளால் ஆத்திரம் அடைந்த நாஜிகள், 1942ஆம் ஆண்டில் ஜூலியஸ் பூசிக்கைச் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்தபோதே ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ எனும் உலகப் புகழ் வாய்ந்த நூலை எழுதினார். சிறையில் கொடுமைப் படுத்தப்பட்ட போதிலும் மனந்தளராமல் துணிவுடன் எதிர்கொண்ட மகத்தான கம்யூனிஸ்ட் ஜூலியஸ், 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். மரணத்திற்குப்பின், ஜூலியஸ் பூசிக்கிற்கு 1950ஆம் ஆண்டு ‘சர்வதேச சமாதானப் பரிசு’ வழங்கப்பட்டது. புகழ் வாய்ந்த ஜூலியஸ் பூசிக் சிறந்த கம்யூ னிஸ்டாக வாழ்ந்ததனால்தான் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார். அவர் ‘கம்யூனிஸ்ட்’ குறித்து கூறுவதைக் கேளுங்கள்: “கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பையும் நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவே தான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமைகளிலிருந்து, அதாவது, பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, மகிழ்ச்சியும் நிறைவும், ஆரோக்கியமும் சுதந்திரமும் உள்ள மனித னுக்கு, இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்ப தற்காக, எங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை. லாபம், லாபம், மீண்டும் லாபம்! இதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அமைப்பு, மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற ஒரு அமைப்பு மனிதத் தன்மை அற்றதாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு - ஒரு கம்யூனிஸ்டுக்கு, மக்களின் மனிதத் தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது, சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை. எனவேதான், நிறைவும் சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில், தங்கள் முழு வலிமையை பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின் வாங்குவதில்லை!” பெரணமல்லூர் சேகரன்