what-they-told

img

இந்நாள் ஜுலை 05 இதற்கு முன்னால்

1841 - உலகின் முதல் தொகுப்புச் சுற்றுலாவை (பேக்கேஜ் டூர்), மரப்பொருட்கள் செய்பவரான 32 வயது தாமஸ் குக் ஏற்பாடு செய்தார். உண்மையில், லாக்பரோ என்ற இடத்தில் நடைபெற்ற மது எதிர்ப்பாளர்களின் பேரணிக்கு, 18 கி.மீ. தொலைவிலுள்ள லைசெஸ்ட்டர் என்ற இடத்திலிருந்து, 500 பேரை சிறப்பு ரயில்மூலம் ஒரு ஷில்லிங் கட்டணம் பெற்றுக்கொண்டு, அழைத்துச் சென்று திரும்ப அழைத்துவந்தார் குக். மிகுந்த மதப்பற்றுக்கொண்ட, முன்னாள் மதபோதகரான குக், பாவங்களுக்கு மதுவே காரணமாயிருப்பதாக நம்பினார். அப்போது வளர்ந்துகொண்டிருந்த ரயில் போக்குவரத்தை, மதுவிற்கு எதிரான இயக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே அவர் இப்பயணத்தை ஏற்பாடு செய்தார். 1842இல் “தாமஸ் குக்” சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கியதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளின் கோடை விடுமுறையில் அருகாமை நகரங்களுக்கு சுற்றுலா ஏற்பாடுசெய்தார். 1851இல் லண்டனில் நடைபெற்ற பெரும்பொருட்காட்சிக்கு(இத்தொடரில் 2019 மே 1இல்), குக்கின் நிறுவனத்தின்மூலம் ஒன்றரை லட்சம்பேர் சென்றுவந்தனர். அடுத்த நான்காண்டுகளில் வெளிநாட்டு(பெல்ஜியம், ஜெர்மெனி, பிரான்ஸ்) சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்தார் குக். பயணிகள் தாங்கள் விரும்பும் விடுதியில் தங்கவும், உணவகத்தில் உண்ணவும் பயன்படுத்திக்கொள்ள ‘ஹோட்டல் கூப்பன்’களை 1868இல் அறிமுகப்படுத்தினார் குக். இன்று பிரபலமாகவுள்ள, வாடிக்கையாளர்களே சுற்றுலாவை வடிவமைத்துக்கொள்ளும் ‘டைனமிக் பேக்கேஜிங்’ முறைக்கு இதுவே முன்னோடி என்று கூறலாம். புனிதப்பயணம் செல்வோர்க்காக 1772இலேயே உருவாகியிருந்த பயணிகள் காசோலையின் முன்னோடி வடிவத்தை, மற்ற நாட்டு நாணயங்களாகவும் மாற்றத்தக்க சர்க்குலர் நோட்-ஆக, 1874இல் தாமஸ்குக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தை நடத்தும்முறையில் கருத்துவேறுபாட்டால், குக்கின் மகன் ஜான் மேசன் குக், 1878இல் தந்தையை நிறுவனத்தைவிட்டு வெளியேற்றிவிட்டார். மேசன் குக்கின் மகன்கள் தந்தை, தாத்தாவைவிட மிகப்பெரிய வளர்ச்சிக்கு நிறுவனத்தை இட்டுச்சென்றனர். 1948இல் இங்கிலாந்து அரசு ரயில்வேயை தேசியமயமாக்கியபோது, தாமஸ் குக் நிறுவனத்தையும் தேசியமாக்கியது. 1972இல் மீண்டும் தனியார்மயமாக்கப்பட்ட இந்நிறுவனம், உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் காலூன்றி, மிகப்பெரிய சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.