what-they-told

img

இந்நாள் ஜூன் 8 இதற்கு முன்னால்

1887 - ‘புள்ளிவிபரங்களைத் தொகுக்கும் கலை’ என்பதற்கு, ஹெர்மன் ஹாலரித் என்ற அமெரிக்கர் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். துளையிடப்பட்ட அட்டைகளில் தரவுகளைத் தொகுக்க, அவர் உருவாக்கியிருந்த, அட்டவணைப்படுத்தும் எந்திரத்தைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். எந்திரங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த மட்டுமே, நெசவுத்துறையில் பயன்படுத்தப்பட்டிருந்த துளையிடப்பட்ட அட்டைகளை(பஞ்ச்ட் கார்ட்), தரவுகளைத் தொகுக்கும் பணிக்கு முதன்முதலில் பயன்படுத்தியவர் ஹாலரித்-தான். நாடாளுமன்ற உறுபப்பினர்கள் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்காகவும், நேரடி வரிவிதிப்பிற்காகவும், அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

1880ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முடிக்க  8 ஆண்டுகள் ஆனதால், இரண்டு ஆண்டுகளிலேயே அடுத்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டியதாயிற்று. இக்காலகட்டத்தில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் ஹாலரித். ரயில் பயணச்சீட்டுகளில் இடப்பட்டுள்ள துறைகளிலிருந்து, பயணியின் வயது, பாலினம் உள்ளிட்ட தகவல்களை நடத்துனர்கள் பதிவு செய்வதைக்கண்ட அவர், அதே முறையினை அடிப்படையாகக்கொண்டு, தரவுகளை எந்திரம் புரிந்துகொள்ளும் வகையில் (மெஷின் ரீடபுள்), துளையிடப்பட்ட அட்டையையும், எந்திரத்தையும் வடிவமைத்தார்.

இதைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 1890இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, திட்டமிடப்பட்டதைவிடப் பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்ததுடன், செலுவும் திட்டமிடப்பட்டதைவிடக் குறைவாகவே ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, கணக்கியல், சரக்குக் கையிருப்புப் பதிவு உள்ளிட்ட துறைகளில் இந்த எந்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைக்க, ‘ஹாலரித் எலெக்ட்ரிக் டேபுலேட்டிங் சிஸ்ட்டம்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார் ஹாலரித். இந்த நிறுவனம், மேலும் 3 நிறுவனங்களுடன் 1911இல் இணைக்கப்பட்டு கம்ப்யூட்டிங்-டேபுலேட்டிங்-ரெக்கார்டிங் கம்ப்பெனி(சிடிஆர்) என்றாகி, அதுவே 1924இல் இண்ட்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்(ஐபிஎம்) ஆகப் பெயர்மாற்றம் பெற்றது! பாதித் தானியங்கி(செமி-ஆட்டோமேட்டிக்) தகவல் பகுப்பைத் தொடங்கிவைத்த இந்த துளையிடப்பட்ட அட்டை முறை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு ஆதிக்கம் செலுத்தியது.

இதில் வருந்தத்தக்க வினோதம் என்னவென்றால், செம்யோன் கார்சகோவ் என்ற ரஷ்ய ஹோமியோபதி மருத்துவர், 1832இலேயே இதைக் கண்டுபிடித்திருந்தார். அப்போது, காவல்துறையின் புள்ளிவிபரப் பிரிவில் பணியாற்றிய அவர், குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைத் தேடுவதற்காக இதை உருவாக்கினார். இதை ரஷ்ய ‘அரச அறிவியல் கழகத்தில்’ சமர்ப்பித்தபோது, இது ஒன்றும் பயனுள்ள கண்டுபிடிப்பல்ல என்று அதன் நிபுணர்கள் நிராகரித்துவிட்டார்களாம்!